Last Updated : 09 Jun, 2023 06:24 AM

 

Published : 09 Jun 2023 06:24 AM
Last Updated : 09 Jun 2023 06:24 AM

நகரம் - கிராமங்களை இணைக்கும் சுற்றுவட்ட பேருந்துகள் வருமா? - படிக்கும் மாணவர்கள் படிக்கட்டில் பயணிக்கும் அவலம்

மாகரல்-திருப்புலிவனம் செல்லும் கிராமப்பேருந்தில் படிகட்டில் தொங்கிய நிலையில் பயணிக்கும் மாணவர்கள். (கோப்பு படம்)

மதுராந்தகம்: கிராமப்புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசலால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்கும் வகையில், கடந்த 1990-ம் ஆண்டுகளில் இயக்கியதை போல் காலை, மாலை நேரங்களில் நகரத்தையும், கிராமங்களையும் இணைக்கும் வகையில் சுற்று வட்ட பேருந்துகள் அல்லது மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், செய்யூர், பவூஞ்சூர், லத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கிராமப்புற மாணவர்கள் ஏராளமானோர் படிக்கின்றனர். பள்ளி மாணவர்கள், தங்களது கிராமங்களில் இருந்து நகரப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பதற்காக, குறைந்தபட்சம் 20 கி.மீ. தொலைவு பேருந்துகளில் பயணித்துவர வேண்டும்.

ஆனால், போதுமானஎண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதில், நகரப்பகுதிக்கு செல்வதற்காக பொதுமக்கள் மற்றும் பணிக்கு செல்வோரும் பயணிப்பதால், பள்ளி நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வேறு வழியின்றி படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.

இதனால், தவறி விழுந்து உயிரிழப்போ அல்லது படுகாயமோ அடையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதனால், கிராமப்புற மாணவர்களின் பேருந்து வசதியை கருத்தில் கொண்டு கடந்த 1990-ம் ஆண்டுகளில் இயக்கியதைபோல், கிராமப் புறங்களை நகரத்துடன் இணைக்கும் வகையில் நகரத்தை சுற்றி வரும் வகையில் சுற்றுவட்ட பேருந்துகளை காலை, மாலையில் இயக்க வேண்டும்.

பழமத்தூர் பழனி

இதன்மூலம், கூட்ட நெரிசல் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் சூழலை தவிர்க்க முடியும். இதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பழமத்தூரை சேர்ந்த முன்னாள் பிடிசி நடத்துநர் பழனி கூறியதாவது: சுற்றுவட்டப் பேருந்துகளை இயக்குவதன் மூலம்கூட்ட நெரிசல் தடுக்கப்பட்டது. இவ்வாறான முறையில் இயக்கப்பட்ட பேருந்தில் நடத்துநராக நான் பணிபுரிந்துள்ளேன்.

போக்குவரத்து பணிமனை அதிகாரிகள், சரியான முறையில் திட்டமிட்டு இடமிருந்து வலது புறமாகவும் இடதுபுறமாகவும் பேருந்துகளை இயக்கலாம். அதேபோல், காலையில் 7:30 மணி முதல் மற்றும் மாலையில் 4:30 மணியளவில் இருந்து நான்கு மணி நேரத்துக்கு நகரை சுற்றியுள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் சுற்று வட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கினால், மாணவர்கள் எளிதாக பேருந்துகளில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, பெற்றோர் சிலர் கூறும்போது, கூலி தொழில் செய்யும் பெற்றோர் தங்களின் பிள்ளைகள் ஆட்டோக்களில் பயணிக்க பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இதனால் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். மேலும், மாலை நேரங்களில் கூட்ட நெரிசலால் பேருந்தை தவறவிடும் மாணவிகளின் பெற்றோர் அம்மாணவி வீடு வந்து சேரும் வரையில் நிம்மதியின்றி தவிக்கின்றனர். எனவே சுற்றுவட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலத்தின் காஞ்சிபுரம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல், கடந்த 3 ஆண்டுகளில் ஏராளாமான பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், நகரப்பகுதிக்கு முக்கியத்துவம் வழங்கி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்ட பேருந்துகள் இயக்கினாலும் பலன் அளிக்குமா என தெரியவில்லை.

ஏனெனில், அனைத்து கிராமங்களுக்கும் இந்த பேருந்துகளை இயக்க முடியுமா என்பது சந்தேகம். மேலும், மாணவர்கள் படிகளில் பயணம் செய்வது மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் வரும் பேருந்து நிறுத்தங்களை கண்காணித்து, மாணவர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு தேவையான அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசு பணிமனை மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x