Published : 20 Nov 2023 06:04 AM
Last Updated : 20 Nov 2023 06:04 AM

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி...

இந்தியாவின் சமூக, பொருளாதாரப் போக்கை தீர்மானிக்கும் காரணியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவெடுத்து வருகின்றன. 2016-ம் ஆண்டில் நாட்டில் 450 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுகிறது. இதுவரையில் நாம் கடைபிடித்துவந்த தொழிற்செயல்பாடுகள் ஸ்டார்ட்அப் யுகத்தில் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன. தொழில்முனைவோர்கள் இந்த மாற்றத்தை உணர்வதும், இந்த மாற்றத்துக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதும் அவசியம்.

இந்தச் சூழலில், ஸ்டார்ட் அப் யுகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான பல்வேறு கோணங்களை மக்களிடம் முன்வைக்கும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்’ இணைந்து, ‘வணிக வீதி: தொழில்முனைவோர்களுக்கான களம்’ என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகிறது. முதல் நிகழ்ச்சி கடந்த அக். 28-ம் தேதி மதுரையில் நடைபெற்றது. கோவை, சென்னை ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஸ்டார்ட் அப் துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுடனான நேர்காணல் ‘வணிக வீதி’ பக்கத்தில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற உள்ளது. அதில், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட் அப் நிபுணர்கள் தங்கள் அனுபவங்களையும் பார்வைகளையும் உங்களுடன் பகிர இருக்கிறார்கள்.

சரி, அப்படியென்றால், இந்தத் தொடருக்கு ‘ஸ்டார்ட்அப் யுகத்தில் தொழில் தொடங்குவது எப்படி’ என்றுதானே தலைப்பு இருக்க வேண்டும். ஏன் ‘ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது? காரணம் உண்டு. ஸ்டார்ட்அப் யுகத்தில் தொழில்செயல்பாடுகள் மட்டும் மாற்றத்துக்கு உள்ளாகவில்லை. படிப்பு, வேலை என அனைத்து கட்டமைப்புகளும் மாறிவருகின்றன. நீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கலாம், அலுவலகத்தில் வேலைபார்த்துக்கொண்டிருக்கலாம், வீட்டை நிர்வகித்துக்கொண்டிருக்கலாம், எழுத்தாளராக இருக்கலாம், சமூக சேவகராக இருக்கலாம்... உங்கள் துறையில் நீங்கள் அடுத்தகட்டத்தை நோக்கி செல்வதற்கு, ஸ்டார்ட் அணுகுமுறையை அறிந்துகொள்வது பெரிதும் உதவியாக இருக்கும். இந்த காலகட்டத்தை இன்னும் கூடுதல் தெளிவுடன் எதிர்கொள்ளவும் அது வழிவகுக்கும். எனவே, தொழில்சார்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான தொடராகவும் இது இருக்கும்.

அத்தியாயம் - 01 | யூடியூப் சேனல் ரூ.100 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது எப்படி? - குவி - நிறுவனர் மற்றும் சிஇஓ அருண் பிரகாஷ் பேட்டி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x