Last Updated : 18 Apr, 2015 03:35 PM

 

Published : 18 Apr 2015 03:35 PM
Last Updated : 18 Apr 2015 03:35 PM

கழிவுநீர் சுத்திகரிப்பு காலத்தின் கட்டாயம்

அமெரிக்காவின் சியேட்டலை மையமாகக் கொண்டு செயல்படுகிறது ஜானிக்கி உயிரி சக்தி ஆலை. மனிதக் கழிவைச் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து குடிநீரைத் தயாரிப்பதே இந்த ஆலையின் நோக்கம். இந்த முயற்சிக்கு பின்னணியில் பில்கேட்ஸின் தன்னார்வ நிறுவனம் இருக்கிறது.

கடந்த ஜனவரியில் சோதனை முடிந்து தயாரான குடிநீரை பில் கேட்ஸ் குடித்துப் பார்த்தார். “இந்தத் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கிறது. இதற்கு முன் நான் பருகிய குடிநீரைவிட இதுவே சிறந்ததாக இருக்கிறது. தினமும் இதனைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன்” என்றார். கழிவு நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கு இப்போதுதான் வந்துகொண்டிருக்கிறது.

அது பரவலாக இன்னும் நாளாகும். ஆனால் இப்போதைக்கு கழிவுநீரைச் சுத்தப்படுத்திக் குடிநீர் தவிர வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்துவதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் பங்கு மகத்தானது.

கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் அவசியம்

ஆண்டுக்கு ஆண்டு மழை பொழிவது குறைகிறது. ஆனால் கோடை வெயிலின் உக்கிரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. இதனால் நிலத்தடி நீரின் அளவும் வெகு வேகமாகக் குறைகிறது. ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு உருவாகிறது என்றால் அதன் விளைவாக அந்தக் குடியிருப்பைச் சுற்றியிருக்கும் இடங்களிலும் நிலத்தடி நீர் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன் மூலம் குடிநீர் தவிர்த்துத் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற தேவைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்த முடியும்.

நன்மைகள் பலவிதம்

கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்துவதின் மூலம் பல நன்மைகள் உள்ளன.

1. தகுந்த திறனுள்ள இயந்திரங்களைப் பொருத்துவதன் மூலம் சுழற்சி முறையில் நீரின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

2. நீர் மேலாண்மையின் மூலம் கட்டுமானங்களுக்கான நீரும் விவசாயத்துக்கான நீரும் பெருமளவு பயன்படுத்துவதற்கான வழி ஏற்படும்.

3. ஏனைய தேவைகளுக்குச் சுழற்சி நீர் பயன்படுவதால் குடிநீரைப் பெருமளவு சேமிப்பதற்கு வழி ஏற்படும்.

4. கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி பெறப்படும் 70 சதவீதம் நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும்.

கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பல்வேறு திறன்களில் கிடைக்கிறது. இந்த இயந்திரத்தைத் தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் எனப் பல இடங்களிலும் பொருத்தலாம். கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் தனி வீடுகளில் பொருத்துவதற்கு ரூ. 1 முதல் 2 லட்சம் வரையும் 40-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியருப்புகளில் பொருத்துவதற்குத் தோராயமாக ரூ.20 லட்சம் வரை இயந்திரங்களின் திறனைப் பொறுத்துச் செலவாகும் என மதிப்பிடுகின்றனர் வல்லுநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x