Published : 19 Oct 2016 10:59 AM
Last Updated : 19 Oct 2016 10:59 AM

காரணம் ஆயிரம் 05: விளக்கு எரிய கண்ணாடி தேவை!

நீங்கள் கோயிலுக்குப் போகும்போது ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கலாம். கோயில்களில் விளக்கேற்றி வைக்கும்போது அகல் விளக்கைச் சுற்றியும் சின்ன சின்னக் கற்களை அடுக்கி வைத்துத் தடுப்புகள் ஏற்படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? சில கோயில்களில் விளக்கேற்றுவதற்காகக் கண்ணாடிக் கூடுகளை வைத்திருப்பார்கள். எதற்காக இவை வைக்கப்பட்டிருக்கின்றன?

சரி, இந்தக் கேள்வி அப்படியே இருக்கட்டும். இன்னொரு உதாரணத்தைப் பார்த்துவிடுவோம். சிம்னி விளக்குகள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?! (இதனைச் சில கிராமங்களில் முட்டை விளக்கு என்பார்கள்) கிராமங்களில் சாயங்கால நேரங்களில் வீட்டு வாசலில் இந்த சிம்னி விளக்குகளை ஏற்றி மாட்டி வைப்பார்கள். லாந்தர் விளக்குகளையும்கூடப் பார்த்திருப்பீர்கள்.

இந்த விளக்குகளில் ஏன் கண்ணாடிக் கூடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன?

“இதெல்லாம் ஒரு கேள்வியா…?” விளக்கு தீபம் காற்றில் அணைந்து போகாமல் தடுப்பதற்காகக் கண்ணாடிக் கூடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றுதான் உங்கள் பதில் இருக்கும். எல்லோரும் இப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட முக்கியமான வேலை ஒன்று கண்ணாடிக் கூட்டுக்கு உண்டு. விளக்கை வேகமாக எரியச் செய்வதும், ஒளிச்சுடரை இன்னும் பெரிதாக்கி எரியச் செய்வதும் (அதாவது ஜூவாலையை நீட்டிப் பெரிதாக்கிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்வதும்) இந்தக் கண்ணாடி கூடுதான். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படுத்துவதுதானே அறிவியல்.

காரணம் என்ன?

கண்ணாடிக் கூடு ஒளிச்சுடரை எப்படிப் பெரிதாக்குகிறது ?

கண்ணாடிக் கூடு தீச்சுடரை நோக்கி வருகிற காற்றைத் தடுக்கிறது என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? ஆனால், உண்மையில் தீச்சுடருக்கு அதிகக் காற்றைக் கொண்டு வந்து சேர்ப்பது கண்ணாடிக் கூடுதான்.

கண்ணாடிக் கூட்டுக்குள் இருக்கும் காற்று தீச்சுடரால் சூடாக்கப்படுகிறது. கண்ணாடிக் கூட்டுக்குள் சூடான காற்றின் எடை குறைகிறது. எடை குறைந்த காற்று மேலே எழும்பி வெளியேறுகிறது. கண்ணாடிக் கூட்டுக்கு வெளியிலிருந்து அழுத்தம் அதிகமான புதிய காற்று கண்ணாடிக் கூட்டுக்குள் வருகிறது. புதிய காற்றில் ஆக்சிஜன் அதிகமாக உள்ளதால் அது எரிவதை வேகப்படுத்துகிறது. மேலும் தீச்சுடரின் நீள, அகலங்கள் அதிகரிக்கின்றன.

லாந்தர் விளக்குகள் மற்றும் சிம்னி விளக்குகளின் கண்ணாடிக் குடுவைகள், பொதுவாக இரும்பு ஸ்டாண்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரும்பு ஸ்டாண்டுகளில் துவாரங்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

கண்ணாடிக் குடுவைக்குள் வெப்பமான காற்று மேலெழுப்பிச் சென்ற பின், கீழே உள்ள இந்தத் துவாரங்கள் வழியாகத்தான் புதிய காற்று உள்ளே செல்கிறது. அகல் விளக்குகள் எரியும் செங்கல் தடுப்புகளிலும் இப்படித்தான். சின்னச் சின்ன இடுக்குகள் வழியாகப் புதிய காற்று உள்ளே செல்கிறது.

ஆக, கண்ணாடிக் கூடுகள் காற்றைத் தடுப்பதில்லை. புதிய காற்றை உள்ளே வரவழைத்துத் தீச்சுடரை நன்றாக எரியச் செய்கிறது! மாணவர்களே, இப்போது புரிகிறதா?, நாம் எத்தனைத் தடை என்று நினைக்கிறோமோ அதுதான் நம் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்

(காரணங்களை அலசுவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x