Last Updated : 25 Dec, 2015 01:29 PM

 

Published : 25 Dec 2015 01:29 PM
Last Updated : 25 Dec 2015 01:29 PM

இது பதிலடி ‘பீப்!

சிம்புவின் 'பீப்' பாடல் சமூகத்தின் சகல தளங்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலில் பீப் பாடலுக்கு, பெண் ஒருவர் பதில் சொல்லும்படியான பாடலை 'மெட்ராஸ் சென்ட்ரல்' குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

'வீட்டு பாத்ரூம்ல பாடுன பாட்ட யாரோ கசியாவிட்டுட்டான்' என்று சிம்புவும், டி.ஆரும் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாகப் பேசி வந்தாலும், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து தினசரி யாராவது ஒருவர் சிம்புவுக்கும், அனிருத்துக்கும் எதிராக‌ வழக்கினை தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

பஸ்ஸில் கண்டக்டர், 50 காசு சில்லறை கொடுக்கவில்லை என்றாலே ‘என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்’ என்று பொங்குகிற நெட்டிசன்கள், சிம்புவின் ‘பீப்’ பாடலை மட்டும் சும்மா விடுவார்களா? கடந்த ஒரு வாரமாக 'வெச்சு செஞ்சு'க்கிட்டேயிருக்காங்கபா!

சிம்புவைத் திட்டுவதற்காகவே குரூப் சாட்டில் ஒன்று சேர்கிற ஆட்களெல்லாம் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பெண் எழுத்தாளர்கள் சிலர் சிம்புவின் பீப் பாடலுக்கு ‘எதிர் வினையாற்றுகிறோம்' என்கிற பெயரில் பீப் கட்டுரை எழுதி முகம் சுழிக்க வைத்த அதே நேரத்தில், பீப் பாடலுக்கு பெண்கள் சார்பாக ஒரு ‘எசப்பாட்டு பீப்' யூட்யூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அதனைப் பார்த்திருக்கின்றனர். ஃபேஸ்புக்கில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதனைப் பகிர்ந்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் சென்னை தத்தளித்த போது, அந்த அவலத்தை 'பியர் க்ரில்ஸ்' பாணியில் நகைச்சுவையாகச் சொன்ன அதே 'மெட்ராஸ் சென்ட்ரல்' குழுதான் இந்தப் பாடலையும் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அந்தக் குழுவின் நிர்வாகியான ஆர்ஜே ராதா மணாளனிடம் பேசியதிலிருந்து...

"சமூகத்தில் நடக்கிற நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அறமும் நகைச்சவையும் கலந்த ஒரு அதிர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய குழுவின் நோக்கம். அதன்படிதான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது டிஸ்கவரி சேனலில் வரும் 'மேன் vs வைல்டு' நிகழ்ச்சியை 'மேன் vs ரெயின்' என்று குறும்படமாகத் தயாரித்திருந்தோம். அந்தக் குறும்படத்தில் ஆக்கிரமிப்புகளை நகைச்சுவையோடு கண்டித்திருந்தோம். இதன் நீட்சியாகத்தான் பீப் பாடலுக்குப் பதில் சொல்லும் பாடலை உருவாக்கினோம்" என்றார்.

பீப் பாடலுக்கு சமூக வலைதளங்களில் தாறுமாறாக கண்டனக் கனைகள் பறந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஒரு பெண் அந்த வரிகளால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாள், அவளுடைய மனநிலை என்ன என்பதை பிரதிபலிக்கத்தான் இந்தப் பாடலை வெளியிட்டோம் என்று சொல்லும் ராதா மணாளன், "சிம்புவின் பாடலில், ‘பீப்’ சத்தத்துக்கு முன்னும் பின்னும் அந்த இரு எழுத்துகள், கெட்ட வார்த்தை என்பதைப் புரியவைத்தன. அதனால், நாங்கள் பீப்பை விடுத்து அந்த இடத்தில் ஒரு ஓசையற்ற மவுனத்தைப் பொருத்தினோம். அதை டேஷ் என்று சொல்லக்கூட மனமில்லை" என்கிறார்.

சிவரஞ்சனி என்னும் பெண்தான் இந்த எசப்பாட்டு பீப் பாடலைப் பாடினாராம். சிம்புவின் விசிறிகள் பலர் அந்தப் பெண் மீது கொலைவெறியோடு அலைகிற காரணத்தால், அந்தப் பெண் தற்போது பயந்து போய் இருக்கிறாராம்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூட்யூப் சேனலில் சிம்புவின் விசிறிகள் என்று கூறி பலர் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டிருப்பதாக வருந்தும் ராதா மணாளன், "இதற்கெல்லாம் பயந்து முடங்கிடாமல் 'மெட்ராஸ் சென்ட்ரல்' தனது பணியைத் தொடர்ந்து செய்யும்" என்று சொல்கிறார் கெத்தாக!

முதல் எதிர்ப்பு ‘பீப்'!

‘வாட்ஸ் ஆப்' தமிழனுக்கு சிம்பு அண்ட் கோ மூலம் புதிய சொல் கிடைத்துள்ளது... ‘பீப்'!

அந்தப் பாடல் வெளியான சில தினங்களிலேயே ‘பீப்' பாடலுக்கு எதிரான பாடல்' என்று ஒரு பாடல், யூடியூப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது. அந்தப் பாடல் பிறந்த இடம் மலேசியா! அதுதான் ‘பீப்' பாடலுக்கு எதிரான முதல் பாடல்.

‘பீப்' பாடலில் இடம்பெற்ற எந்த கெட்ட வார்த்தைகளும் இல்லாத, மிகவும் கண்ணியமான முறையில் இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தது. அதைப் பாடியவர் புனிதா ராஜா என்ற மலேசியப் பெண். அவரே இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

தற்போது மலேசியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் 'கால் வெயிட்டிங்!'

அந்தப் பாடலின் சில வரிகள் இப்படி இருக்கின்றன...

பொண்ணுங்களை தப்பா பேசாதே மாமா மச்சி

பொண்ணுங்களை தப்பா பேசாதே...

எங்களை சீண்டி பாக்காதே மாமா மச்சி

தப்பு கணக்குப் போடாதே...

நாங்க நாட்டை ஆளும் காலம் வந்து

ரொம்ப நாளு ஆச்சிடா

வீட்டுக்குள்ள பூட்டி வெச்ச காலம் போச்சுடா...

உங்க பாட்டையெல்லாம் கேட்டு கேட்டு

மண்டை சுத்திப் போச்சுடா

இப்போ நாங்க பாடப் போறோம் கேட்டுக்கோயேண்டா...

பாடலை முழுவதுமாகக் கேட்க