Published : 11 Feb 2022 11:52 AM
Last Updated : 11 Feb 2022 11:52 AM

சென்டிமென்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை: விஜய் ஆண்டனி பேட்டி

செ.ஏக்நாத்ராஜ்

‘கதைக்கு எது சரியாக இருக்குதோ, அதுதான் என் படங்களுக்கு தலைப்பா அமையுது. ‘பிச்சைக்காரன்’ தலைப்பை நெகட்டிவ் சென்டிமென்டுன்னு சில பேர் பயங்காட்டினாங்க. ஆனா, அந்த கதைக்கு அதை விட்டா, வேற நல்ல தலைப்பு கிடைக்குமா சொல்லுங்க?’- என சி.எஸ்.அமுதன் இயக்கிவரும் ‘ரத்தம்’ படப்பிடிப்பில் நம்முடன் உரையாடினார் விஜய் ஆண்டனி.

அப்போ ‘ரத்தம்’ என்கிற தலைப்பும் கதைக்கானதுதானா?

‘சினிமாவுல பாசிட்டிவ், நெகட்டிவ் சென்டிமென்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல கதையில கடுமையா உழைச்சா கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இதுதான் என் பாலிசி. ‘ரத்தம்’படத்தின் கதைக்கும் இந்த தலைப்பு சரியா பொருந்தினதால, அதையே வச்சோம். அவ்வளவுதான். அதைத் தாண்டி தலைப்புகளுக்கு மெனக்கெடறதில்லை.

‘பிச்சைக்காரன் 2’ என்ன சென்டிமென்ட்டை பேசப்போகுது?

எனக்கு பெரிய வெற்றியை அள்ளிக் கொடுத்தப்படம்’பிச்சைக்காரன்’. அந்தப் படத்தோட இரண்டாம் பாகம்னா, அது அதைவிட நல்லா இருக்கணும்னு நினைச்சோம். அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை அமைஞ்சது. ஷூட்டிங் போயிட்டிருக்கு. ஜனரஞ்சகமான படமா இருக்கும். ‘முதல்வன்’, ‘ரமணா’ மாதிரி, ‘பிச்சைக்காரன் 2’ இருக்கும்ங்கறதைதான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

‘அக்னிச்சிறகுகள்’ல அருண் விஜய்யும் இருக்காரே...

என் கரியர்ல இன்னொரு முக்கியமான படமா இது இருக்கும். ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ மாதிரி இதுவும் இருக்கும். அருண் விஜய் கூட நடிச்சது நல்ல அனுபவம். ரெண்டு பேருக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கு. இயக்குநர் நவீன், அருமையா பண்ணியிருக்கார்னு சொல்றது சாதாரண வார்த்தையாதான் இருக்கும். அவர் கடுமையா உழைச்சிருக்கார். அதுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும். அக் ஷரா ஹாசன், ரைமா சென் உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க.

சவுண்ட் இன்ஜீனியர், இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டர்... அடுத்து?

எனக்குத் தெரியல. இவ்வளவு தூரம் நான் வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. மியூசிக் பண்ணிட்டிருக்கும்போது, திடீர்னு ஒரு நாள், நடிச்சா என்னன்னு தோணுச்சு. வீட்டுல சொன்னேன். பயந்தாங்க. பிறகு என்னமோ முடிவெடுத்து வந்தேன். 16, 17 படங்கள் தாண்டி நடிகனா போயிட்டிருக்கேன். என் மேல இயக்குநர்கள் வச்சிருக்கிற நம்பிக்கை அதிகமாகுது. எனக்காகக் கதை பண்ணிட்டு திறமையான இயக்குநர்கள் வர்றது சந்தோஷமா இருக்கு. இதுவரைதான் எனக்குத் தெரியுது. அடுத்து என்ன பண்ணப் போறேன், என்ன நடக்கப் போகுதுன்னு ஏதும் தெரியல.

நேரடி இந்திப் படத்துல நடிக்க போறீங்களாமே?

தெலுங்கு, இந்தியில என் படங்கள் டப் ஆகி வெளியாகுது. அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ‘பிச்சைக்காரன்’ படத்துக்குப் பிறகு தெலுங்குல ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கு. அடுத்து இந்தியில நேரடியா ஒரு படத்துல நடிக்கலாம்னு இருக்கேன். அதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு. முடிவானதும் சொல்றேன்.

இசை அமைக்கிறது குறைஞ்சிருக்கே?

நேரமில்லையே. வேலை, வேலைன்னு ஓடி ஓடி, குடும்பம், நண்பர்கள் எல்லாத்தையும் மறந்துட்டேன். அதனால, கொஞ்சம் வேலைகளை குறைக்கலாம்னு இருக்கிறேன். குடும்பத்தையும் கவனிக்கணுமில்ல. ரெண்டு வருஷத்துக்கு ரெண்டு படம் மியூசிக், ஒரு படம் எடிட் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஏன்னா, தொழில் கைவிட்டுப் போயிடக் கூடாது.

அடுத்து எந்தப் படம் ரிலீஸ் லிஸ்ட்ல இருக்கு?

‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’ ரெண்டுமே ரெடியா இருக்கு. பாபு யோகேஸ்வரன் இயக்கி இருக்கிற ‘தமிழரசன்’ இதுவரை நான் நடிச்சப் படங்கள்ல என்னை வேறொருத்தராகக் காண்பிச்சிருக்கிற கதைய கொண்ட படம். சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், சங்கீதான்னு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x