Published : 26 Sep 2017 10:31 AM
Last Updated : 26 Sep 2017 10:31 AM

57-வது தேசிய தடகள போட்டியின் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார் லட்சுமண்

57-வது தேசிய தடகள போட்டியில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த லட்சுமண் தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் 57-வது தேசிய தடகள போட்டி நேற்று தொடங்கியது. இதில் 25 மாநிலங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 950-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவரும் சர்வீசஸ் வீரருமான லட்சுமண் தங்கப் பதக்கம் வென்றார்.

பந்தய தூரத்தை அவர், 14 நிமிடங்கள் 4.21 விநாடிகளில் கடந்தார். ரயில்வேயை சேர்ந்த அபிஷேக் பால் 14 நிமிடங்கள் 8.38 விநாடிகளில் கடந்து 2-வது இடமும், சர்வீசஸ் அணியைச் சேர்ந்த மான் சிங்14:08.87 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3-வது இடமும் பிடித்தனர்.

மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ரயில்வே அணியைச் சேர்ந்த எல்.சூர்யா பந்தய தூரத்தை 16 நிமிடங்கள் 2.85 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ரயில்வேயை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சிந்தா யாதவ் (16:40.45) வெள்ளிப் பதக்கமும், ஆல் இந்தியா போலீஸ் அணியைச் சேர்ந்த சாய் கீதா நாயக் (16:53.97) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ஆடவருக்கான குண்டு எறிதலில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த தேஜிந்தர் பால் சிங் தங்கம் வென்றார். அவர், 18.86 மீட்டர் தூரம் எறிந்தார். ஓஎன்ஜிசி அணியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் (18.80) வெள்ளிப் பதக்கமும், ரயில்வே அணியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங் (18.51) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான ஈட்டி எறிதலில் ரயில்வே அணியைச் சேர்ந்த சரிதா பி.சிங் 60.45 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ரயில்வே வீராங்கனையான குன்ஜன் சிங் (59.10மீ) வெள்ளிப் பதக்கமும், ஹரியாணாவைச் சேர்ந்த ஜோதி (57.07 மீ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x