Published : 03 Sep 2022 12:04 AM
Last Updated : 03 Sep 2022 12:04 AM

ஆசிய கோப்பை | இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது இந்திய அணி.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை தொடங்கும் சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தலா ஒரு முறை மோதவுள்ளன. இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் முறையாக பாகிஸ்தான் உடன் மோதும் இந்தியா:

லீக் சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.

முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்களே தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தில் ஜடேஜா போல்டானார். ஒரு கட்டத்தில் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா. இதனால் இந்தப் போட்டி அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒன்றாக அமைந்தது.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும் வாய்ப்பு வந்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இரண்டு அணிகளுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளதால் நாளை மறுதினம் நடைபெறும் ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஹாட்ரிக் விருந்து’

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில் ஹாட்ரிக் மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் முதல் இரு இடங்களுக்குள் வந்தால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும். அப்படி நடந்தால் ரசிகர்களுக்கு ‘ஹாட்ரிக்‘ விருந்துதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x