Published : 23 Feb 2022 08:25 PM
Last Updated : 23 Feb 2022 08:25 PM

'கிரிக்கெட்டை தாண்டி நீங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்' - யுவராஜ் சிங் குறித்து விராட் கோலி

டெல்லி: 'உங்கள் வாழ்க்கையும், புற்றுநோயில் இருந்து நீங்கள் மீண்டதும், கிரிக்கெட் மட்டுமின்றி, அதை தாண்டி அனைத்து மக்களுக்கும் அது எந்நாளும் பெரிய இன்ஸ்பிரேஷன்' என்று யுவராஜ் சிங் தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு நேற்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பரிசு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தப் பரிசுடன் உருக்கமாக கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பிய யுவராஜ் அதில், "விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளம் பையனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்றதில் இருந்து இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்துள்ளாய். களத்தில் நீ காட்டும் ஒழுக்கமும், ஆர்வமும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் கிரிக்கெட் மட்டையை எடுக்க வைத்துள்ளதுடன், அவர்களுக்குள் ஒரு நாள் நீல நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற கனவைத் தூண்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்தி கொண்டு வரும் நீ, ஏற்கெனவே இதில் நிறைய சாதித்துவிட்டாய். நீ ஒரு லெஜண்ட்ரி கேப்டன் மட்டுமல்ல அற்புதமான தலைவரும்கூட. உன்னுள் இருக்கும் நெருப்பு எப்பொழுதும் எரித்துக்கொண்டே இருக்கட்டும். நீ ஒரு சூப்பர் ஸ்டார். தொடர்ந்து நாட்டை பெருமைப்படுத்து!" என்று கூறியிருந்தார். யுவராஜ் சிங்கின் இந்த அன்பு நன்றி தெரிவித்துள்ளார் விராட் கோலி. இதுதொடர்பாக தனது பதிவில், "யுவி, நீங்கள் கொடுத்த இந்த அற்புதமான பரிசுக்கும், உங்களின் அளவில்லா அன்புக்கும் எனது நன்றிகள்.

இந்தப் பரிசு எனது கிரிக்கெட் வாழ்க்கையை முதல்நாளில் பார்த்த ஒருவரிடம் இருந்து கிடைத்துள்ளது மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது. இது நிறைய அர்த்தம் மிகுந்தது. உங்கள் வாழ்க்கையும், புற்றுநோயில் இருந்து நீங்கள் மீண்டதும் கிரிக்கெட் மட்டுமின்றி அதையும் தாண்டி அனைத்து மக்களுக்கும் அது எந்நாளும் பெரிய இன்ஸ்பிரேஷன். நீங்கள் யார் என்பது எனக்கு தெரியும். எப்போதும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்காக மிகவும் அக்கறையுடனும் இருப்பீர்கள். நாம் இருவரும் இப்போது பெற்றோர்கள். இந்த ஆசிர்வாதம் மதிப்புமிக்கது என்பதையும் நாம் அறிவோம். இந்த புதிய பயணத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி, அழகான நினைவுகள் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்க விரும்புகிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். இருவரின் பரஸ்பர அன்பு வெளிப்படுத்தல் வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x