Published : 22 Feb 2022 05:06 PM
Last Updated : 22 Feb 2022 05:06 PM

ஓப்பனர் டு பினிஷர் ரோல்... ஹர்திக்கிற்கு மாற்றாக வெங்கடேஷ் ஐயர் - பிசிசிஐ கண்டுகொள்ளுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் தேடப்படும் ஒரு திறமை வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர். ஜாம்பவான் கபில்தேவ், ஒரு ஆகச் சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். அவருக்கு பிறகு வேறு எந்த வீரரும் அந்த இடத்தை பெற முடியவில்லை. கிரெக் சேப்பல் பயிற்சியாளராக இருந்த காலத்தில் கபில் தேவ் ரோலில் இர்ஃபான் பதானை முயற்சித்து பார்த்தார். இதில் பலன் கிடைத்தாலும், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

காரணம், இந்திய அணியில் இடம்பிடிக்கும் முன்புவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல், அணியில் இடம்பிடித்த பின்பே பேட்டிங் பயிற்சியில் தீவிரம் காட்டினார். அதுவே, கிரிக்கெட்டில் அவரது வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது. இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டும் சிறப்பாக வீசும் திறமையான பந்து வீச்சாளராக அறியப்பட்ட பதான், பேட்ஸ்மேன் முயற்சியில் பந்துவீச்சின் சாரத்தை இழந்து அணிக்கு தேர்வாக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். பதானோடு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேடல் முடிந்துவிடவில்லை. ஸ்டூவர்ட் பின்னி போன்ற பல சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர்களை நிர்வாகம் முயற்சித்தது. அப்படி முயற்சித்தவர்களில் எவரும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த தவறினர். இறுதியாக நீண்ட தேடலுக்கு விடையாக கிடைத்தவர் ஹர்திக் பாண்டியா.

ஒரு விக்கெட் டேக்கிங் சீம் பவுலராக, அதேநேரம் பவர்-ஹிட்டிங் பேட்ஸ்மேனாக பல போட்டிகளில் இந்திய அணிக்கு இக்கட்டான சூழல்களில் கைகொடுத்தார். இதனால் மூன்று ஃபார்மெட் போட்டிகளிலும் விரைவாகவே இந்திய அணியின் அங்கமாக மாறினார். பல முன்னணி வீரர்கள் 'அடுத்த கபில் தேவ்' என அவரைப் புகழ்ந்தனர். அதற்கேற்போல் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பிறகு முதல் ஆளாக அவர் ஒவ்வொரு முறையும் அணிக்கு தேர்வாகி இந்திய அணியின் மதிப்புமிக்க சொத்துகளில் ஒருவராக மாறினார். கிட்டத்தட்ட இரண்டுவருட அவரின் இந்தப் பயணம் முதுகு அறுவை சிகிச்சையால் கேள்விக்குறியான நிலைக்குச் சென்றது. ஆரம்பத்தில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் சீக்கிரமாக மீண்டுவருவார் என நம்பப்பட்டது. ஆனால், அவரின் ரிட்டர்ன் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தது.

அறுவை சிகிச்சையால் அவரால் பவுலிங் செய்ய முடியாத நிலை. முதலில், தற்காலிகமாக ஹர்திக் பந்துவீச்சை மேற்கொள்ள மாட்டார், காயங்கள் சரியான பின் முழு ஆல்ரவுண்டராக வருவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் வருடங்கள் ஆகியும் அவருக்கான காத்திருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யாமல் இருந்தது. பாண்டியா இன்னும் காயங்களுடன் போராடி வருவதால், வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் பிரச்சனைக்கு இந்தியா மற்றொரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது தான் 2021 ஐபிஎல் சீசன் வெங்கடேஷ் ஐயரை கண்ணில் காட்டியது.

கடந்த ஐபிஎல் சீசனில் அறிமுக வீரராக கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங்கில் பவர் ஹிட்டராக மிரட்டிய வெங்கடேஷ் ஐயர், தனது சீம் பவுலிங் திறமையையும் வெளிப்படுத்தினார். இது இந்திய அணிக்கு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியது. வேறு ஆப்ஷனே இல்லாமல் வெங்கடேஷ் ஐயரை அணிக்குள் கொண்டுவந்தது சோதித்தது பிசிசிஐ நிர்வாகம். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியா 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அனைத்திலும் வெங்கடேஷ் ஐயர் விளையாடியுள்ளார். மற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை ஒப்பிடும்போது இது குறைவான ஒன்றே.

தென்னாபிரிக்காவில் சொதப்பினாலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒரு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்துள்ளார். ஓப்பனிங் பேட்ஸ்மேனான அவரை, நடுவரிசையில் இறங்க பணித்தது அணி நிர்வாகம். அந்த வரிசையிலும் தன்னால் விளையாட முடியும் என்பதை நிரூபித்துள்ளார். கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 92 ரன்கள் (24*, 33, மற்றும் 35*) எடுத்ததுடன், இரண்டு போட்டிகளில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை தேடிகொடுத்தார். பேட்டிங்கைத் தவிர, பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். விக்கெட்டுகள் வீழ்த்துவதை விட, இந்த தொடரில் வெங்கடேஷ் தனது பவுலிங்கில் சீரான வேகம் மற்றும் துல்லியத்தை கடைபிடித்தார். முந்தைய போட்டிகளில் இவ்வளவு துல்லியமாக லைன் அண்ட் லெந்தில் பந்துவீசியதில்லை. துல்லியத்துடன் வேகமாக பந்து வீச இந்தூரில் எடுத்துவரும் சிறப்பு பயிற்சி அவருக்கு வெகுவாக கைகொடுத்துள்ளது.

அவரின் இந்த அர்ப்பணிப்பும் ஆட்டத்திறனையும் மேற்கோள்காட்டி அடுத்த டி20 உலககோப்பைக்கு ஹர்திக் பாண்டியா இடத்தில் வெங்கடேஷ் ஐயரை கொண்டுவர வேண்டும் என்று வாசிம் ஜாபர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் கோரிக்கைக்கு பின்னணியில் வேறுசில விஷயங்களும் உள்ளது. ஹர்திக் பாண்டியா எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்பது யாருக்கும் தெரியாத ஒரு சஸ்பென்ஸாக உள்ளது. 100% உடற்தகுதி பெற்று, பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் பங்களிக்கத் தயாராக இருப்பதாக நிரூபித்த பின்னரே குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என்று தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், ஐபிஎல்லுக்கு முன்னதாக ஹர்திக் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்றார். ஆனால் எதையும் அலட்டிக்கொள்ளாமல் தனது நிலைப்பாட்டை பற்றி இன்னும் சொல்லாமல் இருந்து வருகிறார் ஹர்திக். டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஏழு மாதங்கள் கூட இல்லாத நிலையில் ஹர்திக்கின் சஸ்பென்ஸ் அவருக்கான இடத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. இப்படியான சூழலில் தான் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சைப் பார்த்த அனைவரும், தேர்வாளர்கள் அவரை உலகக்கோப்பையில் புறக்கணிப்பது எளிதானது செயல் அல்ல என்பதை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்கள் கூறுவது போல் ஹர்திக்கின் இடத்துக்கு தகுந்த, இந்தியாவின் அடுத்த வேகப் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் தேடுதலுக்கு முடிவாக வெங்கடேஷ் ஐயர் கிடைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் வெங்கடேஷின் சராசரி 40க்கு மேல் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 160க்கு மேல் உள்ளது. பேட்டிங்கில் இதே ஆட்டத்திறனுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியின் பக்கபலமாக இருப்பது உறுதி. அது சாத்தியப்படுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் அவருக்கு நிறைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x