Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM

முன்னாள் வீராங்கனையின் தாய்க்கு கரோனா தொற்று: சிகிச்சைக்கு ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

ஹைதராபாத்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கே.எஸ்.ஷ்ரவந்தி நாயுடு. இவரது பெற்றோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் தனது தாயின் மருத்துவ செலவுக்காக ஷ்ரவந்தி ரூ.16 லட்சம் வரை செலவு செய்துள்ளார். மேற்கொண்டு பணத்தை திரட்ட முடியாமல் ஷ்ரவந்தி கஷ்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ-யின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.வித்யா யாதவ் ட்விட்டர்பக்கத்தில் ஷ்ரவந்தி நாயுடுவின் தாயாரின் நிலை குறித்து எடுத்துக்கூறி நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த பதிவை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.தர் உடனடியாக அதை, கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன் ஹனுமா விகாரி ஆகியோருக்கு இடுகையில் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து விராட் கோலி, ஷ்ரவந்தியின் தாயாரின் சிகிச்சைக்காக ரூ.6.77 லட்சம் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வித்யா யாதவ் கூறும்போது, “விராட் கோலி உடனடியாக செயல்பட்டு உதவிய விதத்தால் நான் ஆச்சர்யப்பட்டேன். இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரரிடம் இருந்து எவ்வளவு பெரிய அணுகுமுறை வெளிப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை விராட் கோலியின் கவனத்துக்கு கொண்டு சென்ற இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.தருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x