Published : 25 Dec 2015 11:41 AM
Last Updated : 25 Dec 2015 11:41 AM
இந்தியாவுக்கு எதிரான தொடரை கரீபியனில் வைத்து நடத்த மேற்கிந்தியத்தீவுகள் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஒருநாள் தொடர் நடைபெற்று கொண்டிருந்த போது மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மேற்கிந்தியத்தீவு வீரர்கள் தொடரை பாதியில் புறக்கணித்தனர். இதனால் பிசிசிஐ மாற்று ஏற்பாடாக இலங்கை அணியை வரவழைத்து ஒருநாள் போட்டி தொடரை நடத்தி முடித்தது.
மேற்கிந்தியத்தீவுகள் தொடரை புறக்கணித்தது பிசிசிஐக்கு பெருத்த ஏமாற்றமாகவும். அதிர்ச்சியாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் இனிமேல் விளையாடுவது கிடையாது என்றும், தொடரை பாதியில் ரத்து செய்துவிட்டு திரும்பியதற்கு இழப்பீடு தரவேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.
இதற்கிடையே வீரர்களின் நடத்தை தொடர்பாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. இந்நிலையில் பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷசாங் மனோகருடன், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலை வர் டேவ் கேமரூன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு இந்திய அணிக்கு எதிரான தொடரை 2016-ம் ஆண்டில் கரீபியனில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஒப்புக்கொண்டால் விளையாடுவது உறுதியாகிவிடும். இந்த முறை எந்தவித இடையூறும் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றும் டேவ் கேமரூன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT