Published : 15 Aug 2017 10:03 AM
Last Updated : 15 Aug 2017 10:03 AM

டிஎன்பிஎல் பிளே ஆப் சுற்றில் இன்று ஆல்பர்ட் டூட்டி பாட்ரியாட்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவுள்ள முதலாவது ப்ளே ஆப் சுற்று போட்டியில் ஆல்பர்ட் டூட்டி பாட்ரியாட்ஸ் அணியுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மோதுகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 3 வாரங்களாக நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் கலந்துகொண்டன. இந்த அணிகளில் முதல் 2 இடங்களைப் பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஆல்பர்ட் டூட்டி பாட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையிலான ப்ளே ஆப் சுற்று போட்டி இன்று நடக்கிறது.

நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூட்டி பாட்ரியாட்ஸ் அணி, இந்த ஆண்டு ஒரு லீக் போட்டியில்கூட தோற்காமல், ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த போட்டிகளையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது அந்த அணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி ஆகியோர் பேட்டிங்கில் சிறந்து விளங்குகின்றனர். இதில் வாஷிங்டன் சுந்தர், இந்த ஆண்டு தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் 372 ரன்களைக் குவித்து பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் அவர் இந்தத் தொடரில் இதுவரை 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதேநேரத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஆடிய 7 லீக் போட்டிகளில், 6 போட்டிகளில் அந்த அணி வெற்றியை ருசித்துள்ளது. ஆல்பர்ட் டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வியை தழுவியுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைப் பொறுத்தவரை, ஹரி கோபிநாத் தலைவன் சற்குணம் ஆகியோரை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x