Published : 23 Aug 2017 06:51 PM
Last Updated : 23 Aug 2017 06:51 PM

நான் முகத்தில் க்ரீம் தடவிய போட்டிகளும் சூதாட்டம் என்று கூறுவீர்களா? ஸ்ரீசாந்த் கேள்வி

டவல் ஒன்றை தன் பேன்ட்டில் சொருகி சூதாட்ட புக்கிகளுக்கு ‘சிக்னல்’ கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில்தான் ஸ்ரீசாந்த் தனது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்து தற்போது கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பினால் மீண்டும் நம்பிக்கை பெற்றுள்ளார்.

2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் அந்த இரவு ஸ்ரீசாந்த் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அப்போது அனைத்து ஊடகங்களும் ஸ்ரீசாந்துக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்தன, தனது பேன்ட்டில் டவல் ஒன்றைச் சொருகுவதன் மூலம் புக்கிகளுக்கு தான் அடுத்து என்ன வீசப்போகிறோம் என்பதற்கான சிக்னலை ஸ்ரீசாந்த் அளித்தார் என்று அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால் சமீபத்திய கேரள உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஸ்ரீசாந்த் அது குறித்து விஸ்டன் இதழுக்கு கூறியபோது:

நான் டவல் வைத்துக் கொளவது ஆர்ம் பேண்ட் அணிவது என்று பழக்கமுள்ளவன். காரணம் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர், என் பயிற்சியாளர் ஆலன் டோனல்டு இப்படிச் செய்வார், நானும் அவர் வழியைப் பின்பற்றினேன், காரணம் நான் அவரை மிகவும் நேசிப்பவன்.

நான் பலமுறை இதனைக் கையாண்டிருக்கிறேன். டோனால்ட் போலவே முகம் முழுதும் ஜிங்க் ஆக்சைடு கிரீமை தடவிக் கொள்வேன். ஆகவே அந்தப் போட்டிகளும் சூதாட்டம் என்று கூறுவீர்களா? மூடநம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? இப்படி ஏதாவது செய்வதன் மூலம் நான் ஒழுங்காக வீசாத போது எனக்கு நம்பிக்கை அளிக்க இவை உதவுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் முதல் ஓவரே நடுவர் குமார் தர்மசேனாவிடம் நான் டவல் வைத்துக் கொள்வது சரிதானா என்று அனுமதி கேட்டேன். நான் அவரிடம் கேட்டது நிச்சயம் ஸ்டம்ப் மைக்கில் எடுத்திருக்கும். டவல் சொருகிக் கொண்டால் என்னை நானே ஆலன் டோனால்டாக நினைத்துக் கொள்வேன்” என்றார் ஸ்ரீசாந்த்.

தற்போது 2019 உலகக்கோப்பையில் இந்திய அணியில் ஆடுவேன் என்று சூளுரைத்தார் ஸ்ரீசாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x