Published : 22 Aug 2017 04:38 PM
Last Updated : 22 Aug 2017 04:38 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வருகை தரும் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்துள்ளார்.
அதாவது தங்கள் நாட்டில் தங்கள் அணி ஏறக்குறைய வீழ்த்த முடியாத அணியே என்று ஷாகிப் அல் ஹசன் ஆஸ்திரேலியாவைச் சீண்டியுள்ளார்.
தி கார்டியன் இதழில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தப் பயணம் மிக நீண்ட பயணம், நம்ப முடியாத பயணம். வங்கதேசத்தில் கூட நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறுவோம் என்று யாரும் நம்பவில்லை. எங்களிடம் இந்தத் திறமை உள்ளது, இந்த நம்பிக்கையை வெற்றிகளின் மூலமே உருவாக்கியுள்ளோம். இப்போதைக்கு தன்னம்பிக்கையில் குறைவில்லை.
உள்நாட்டில் எங்களை வீழ்த்த முடியாது என்று பலமாக நம்புகிறோம். யார் எதிரணி என்பது பற்றிக் கவலையில்லை. எனவே இந்த ஒரு நம்பிக்கைதான் ஒரு அணியை சிறந்த அணியாக, வெற்றியணியாக உருவாக்குகிறது.
முன்பு வலுவான அணிகளுடன் மோதும்போது டிரா செய்ய வேண்டும் என்ற மனநிலையே பிரதானமாக இருந்தது. அதன் பிறகு வெற்றி பெற முயற்சி செய்வோம் என்று ஆடினோம். இதுதான் எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நிலைபெறச் செய்தது.
மகுராவில் நான் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடிவந்தேன். அப்போது முதலே தோல்வியை வெறுத்தேன். எனவே நிறைய முறை வெற்றி பெற்றுள்ளேன். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்தையும் விரும்பினேன்.
வங்கதேசத்தில் கிரிக்கெட் ஒரு மதம். நாங்கள் ஆடினால் அனைவரும் டிவி முன் உட்கார்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் கிரிக்கெட்டைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை கிடையாது. இதுதான் எங்கள் வளர்ச்சியிலும் பங்காற்றியது என்றால் மிகையாகாது.
இவ்வாறு கூறினார் ஷாகிப் அல் ஹசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT