Published : 03 Aug 2016 04:57 PM
Last Updated : 03 Aug 2016 04:57 PM

10 ஆண்டுகளில் கனவும் நிஜமும்: கோலி நெகிழ்ச்சி பகிர்வுக்கு திராவிட் மகிழ்ச்சி பதில்

கிரிக்கெட்டில் தலைமுறைகள் மாறலாம்; ஆனால் ஊக்கமளித்தவர்களை மறக்காத இளம் தலைமுறை ஆரோக்கியமானதாகும். அவ்வகையில் விராட் கோலி ராகுல் திராவிடுடன் இருந்த இரண்டு புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பாக திராவிடின் பார்வைக்கு ஏங்கிய ஆச்சரியமான கண்களுடன் இளம் விராட் கோலி, இன்னொன்று அதே திராவிட், டெஸ்ட் கேப்டன் விராட் கோலியை பேட்டி எடுத்தது.

முதல் படத்தில் சிறுவனாக தோற்றமளிக்கும் விராட் கோலி, தனது லட்சிய ஆளுமையான திராவிட்டையே உற்று நோக்க, மற்ற வீரர்க்ளோ கேமராவை நோக்குகின்றனர். திராவிடின் கண்களை சந்திக்கும் தீராத குழந்தை போன்ற அவா விராட் கோலியின் கண்களில் தெரிகிறது.

இந்தப் புகைப்படங்களுடன் விராட் கோலி எழுதிய வாசகங்கள் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாகும்: “இத்தகைய கணங்கள் நம் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இப்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதற்குமான நன்றி உணர்விற்கும் உரியதாகும்.

ஒருமுறை இந்த லெஜண்டின் (ராகுல் திராவிட்) கண்களைச் சந்திக்க சிறுவனாக இருந்த போது ஆவலுற்றேன். பிறகு அதே லெஜெண்ட் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடிய போது என்னை பேட்டி எடுத்தார்.

கனவுகள் உண்மையாகும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே” என்று மூத்த வீரர்களிடமிருந்தும், தான் எந்த மாதிரி வீரராக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்பதற்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இந்தப் புகைப்படங்களை தன் மகாவாக்கியங்களுடன் வெளியிட்டுள்ளார்.

கோலியின் இந்தப் பதிவை தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட ‘லெஜண்ட்’ திராவிட், இதற்கு அளித்த அருமையான பதில் இதோ: "என்னுடைய பார்வைக்காக ஏங்கினாயா அல்லது ’நீங்கள் செய்தது அனைத்தையும் நான் செய்வேன், உங்களைவிடவும் மேலும் சிறப்பாக நான் செய்வேன்’ என்று உன் மனதுக்குள் கூறிக்கொண்டாயா! உங்கள் ஆட்டம் அருமை கோலி, இப்படியே தொடர வாழ்த்துக்கள்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x