Published : 11 May 2017 03:00 PM
Last Updated : 11 May 2017 03:00 PM

கான்பூரில் ரெய்னாவைச் சந்திக்க மைதானத்திற்குள் புகுந்த ரசிகரால் பரபரப்பு

கான்பூரில் நேற்று குஜராத் லயன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதிய போது டெல்லி அணியின் விரட்டலின் போது ரெய்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுரேஷ் ரெய்னா கடைசியாக இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் ஆடியது 2015-ஆக இருக்கலாம், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரபலமாகத் திகழும் ரெய்னாவுக்கு தீவிர ரசிகர்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

டெல்லி அணி 196 ரன்கள் இலக்கை விரட்டியபோது ரெய்னா பதற்றத்துடன் தனது பீல்டர்களைக் கொண்டு களவியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.

ஆட்டத்தின் 4-வது ஓவரில் கருண் நாயர் அப்போதுதான் பிரதீப் சங்வான் பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு விரட்டியிருந்தார். அடுத்த பந்தை சங்வான் வீசுவதற்கு முன்பாக ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் எழுந்தது. ரெய்னா என்றும் ‘3’ என்றும் எழுதப்பட்டிருந்த ஆரஞ்சு நிற டி-சர்ட் அணிந்த நபர் அப்போது பாதுகாப்பு அரண்களைக் கடந்து மைதானத்திற்குள் புகுந்து நேராக ரெய்னாவை நோக்கி வந்தார்.

அவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். ரெய்னா முன்னால் மண்டியிட்டு ஆட்டோகிராப் வேண்டினார். அப்போது ரெய்னாவும் கள நடுவரும் அவரை மீண்டும் பார்வையாளர்கள் பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

களத்தில் இறங்கும் முன் இந்த தீவிர ரெய்னா ரசிகர் தன் நண்பர்களிடம் தான் மைதானத்திற்குள் ஊடுருவப் போவதாக தெரிவித்துள்ளார்.

இவர் பிற்பாடு கூறும்போது, ரிஷப் பந்த் கொடுத்த கேட்சை ரெய்னா ஸ்லிப்பில் பிடித்ததற்காக அவரை வாழ்த்தச் சென்றேன் என்றும் ஏற்கெனவே ரஞ்சி டிராபி போட்டியில் ரெய்னாவைச் சந்தித்துள்ளேன் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x