Published : 24 Mar 2018 09:23 PM
Last Updated : 24 Mar 2018 09:23 PM

பேங்க்ராப்ட் பையில் இருந்தது என்ன?: ஆஸி.-தெ.ஆ டெஸ்டில் கிளம்பியது அடுத்த சர்ச்சை

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளன்று தென் ஆப்பிரிக்கா தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவந்த போது ஆஸ்திரேலிய பீல்டர் பேங்க்ராப்ட் பந்தைத் தேய்க்க வெளியிலிருந்து கொண்டு வந்த ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்தியதாக தொலைக்காட்சியில் காட்டப்பட கிளம்பியது இன்னும் சீரியசான சர்ச்சை.

ஏற்கெனவே வீரர்களுக்கு இடையேயான சர்ச்சைப் போதாது என்று ஆஸ்திரேலிய வீரர் பேங்க்ராப்டினால் தற்போது பந்தின் தன்மையை மாற்றும் ‘பால் டேம்பரிங்’ என்ற பந்தை சேதப்படுத்தும் சீரியசான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேங்க்ராப்ட் பந்தைத் தேய்க்க மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை பயன்படுத்தியதாக கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆக அதன் ஒரு பக்கத்தைத் தேய்த்து இன்னொரு பக்கத்தை பளபளப்புக் குன்றாமல் பராமரிக்க வேண்டும், இதனை இயற்கையான முறையில்தான் செய்ய வேண்டுமே தவிர உப்புக் காகிதம், சோடாபாட்டில் மூடி போன்ற வெளியிலிருந்து கொண்டு செல்லும் பொருளினால் செய்வது விதிமுறைகளுக்குப் புறம்பானது, கடும் அபராதம், தடை உள்ளிட்ட தண்டனைகளுக்குரியதாகும்.

நடுவர்களான நீஜல் லாங், இல்லிங்வொர்த் ஆகியோர் பேங்க்ராப்ட்டுடன் இது குறித்து பேசியதும் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஆனால் பந்தையும் மாற்றவில்லை, இதற்கான முதற்கட்ட 5 ரன் அபராதமும் விதிக்கப்படவில்லை.

நடுவர்கள் பேங்க்ராப்டுடன் பேசும்போது அவர் உபயோகித்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட மஞ்சள் நிற பொருளுக்குப் பதிலாக கறுப்பு நிற துணியைத்தான் காண்பித்தார்.

முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார், ஆஸ்திரேலியர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கூறினார்.

வர்ணனையிலிருந்த ஷேன் வார்னும் உண்மையை ஆஸ்திரேலியா ஒப்புக் கொள்ள வேண்டும் இதில் பேங்கிராப்ட் மட்டும் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார், டேரன் லீ மேன், கேப்டன் ஸ்மித் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x