Last Updated : 03 Jun, 2018 03:04 PM

 

Published : 03 Jun 2018 03:04 PM
Last Updated : 03 Jun 2018 03:04 PM

‘ரசிகர்களே, ஒருநாள் எல்லாம் மாறும்; ஆதரவு தாருங்கள்’ - இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உருக்கம்

 தயவுசெய்து மைதானத்துக்கு நேரில் வந்து கால்பந்து போட்டியைப் பாருங்கள், ஆதரவு தாருங்கள், இன்று இல்லாவிட்டாலும்கூட என்றாவது ஒருநாள் உங்களுக்குப் பிடித்தார்போல் இந்திய கால்பந்து மாறும் என்று கால்பந்துப் போட்டிக்கு ரசிகர்களிடம் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஆதரவு கோரியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவும், மோகமும், மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பதில்லை என்பது நிதர்சனம். கிரிக்கெட் வீரர்களைப் போல் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு விளம்பரம் மூலம் வருமானமும், ஊதியமும் தரப்படுவதும் இல்லை.

இதனால், முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் கூட மற்ற விளையாட்டு வீரர்கள் பதக்கத்தையும், பரிசுகளையும் வென்று வந்தால்கூட நம் ரசிகர்கள் அவர்களை வரவேற்பதில்லை, பாராட்டுவதில்லை. இந்த நிலை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்திய அணி டி20 உலகக்கோப்பை பெற்றுத்தந்த போது மும்பை நகரமே அவர்களை வரவேற்றது, கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளிக்கொடுத்தது பிசிசிஐ.

ஆனால், செஸ் போட்டியில் விஸ்வநாதன் சாம்பியன் பட்டம் வென்றபோது எப்படி வரவேற்பு இருந்தது, வில்வித்தையில், துப்பாக்கிச் சுடுதலில், பாட்மிண்டனில் நமது வீரர்கள், வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றபோது கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கொடுக்கப்பட்டதா என்பது விவாதத்துக்கு உரிய விஷயம். அப்போது ஏற்பட்ட நிலையும் நமக்குத் தெரியும்.

ஆனால், இதே நிலை ரசிகர்கள் மத்தியில் தொடரக்கூடாது, இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளோடு சேர்ந்து மற்ற விளையாட்டுகளும் வளர வேண்டும், அதற்கு ரசிகர்களால் மட்டுமே அந்த வளர்ச்சி சாத்தியம் என்று உணர்ந்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

மும்பையில் நேற்று இன்டர்கான்டினென்டல் கால்பந்துப் போட்டி நடந்தது. இதில் சீனாவில் சீனத் தைப்பே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியைக் காண 2500 ரசிகர்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். அரங்கில் 90 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன. இது இந்திய கால்பந்து ரசிகர்களின் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நம்பிக்கை அளவையும் குலைத்துவிடும்.

சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்கமுடியாமல் போனதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் ரயில் மூலம் புனே சென்று ஆட்டத்தைக் கண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்படிப்பட்ட ரசிகர்கள் கால்பந்துப் போட்டிகளுக்கு இல்லையே என கேப்டன் சுனில் சேத்ரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் சுனில் சேத்ரி வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

''இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் கோரிக்கை, தயவு செய்து மைதானத்துக்கு வாருங்கள், எங்களின் கால்பந்து ஆட்டத்தை நேரில் காணுங்கள். கால்பந்துப் போட்டியைப் பற்றி பேசுங்கள், அதன்பின் வீட்டுக் செல்லுங்கள், விவாதம் நடத்துங்கள்.

ஆனால், நீங்கள் வரும்போது இருந்த மனநிலை போகும்போது இருக்காது என்று உறுதியளிக்கிறேன். சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் எங்களுக்கு உங்களின் ஆதரவு மிகவும் முக்கியம்.இந்தியாவில் கால்பந்து வளர்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் அவசியம்

ஐரோப்பிய கால்பந்து அணியின் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களின் ரசிகர்களாக நீங்கள் இருக்கலாம், ஐரோப்பிய அணிகளுக்கு நீங்கள் ஆதரவு தரலாம். ஆனால், ஐரோப்பிய வீரர்களுக்கு இணையாக, அந்த அணிகளுக்கு இணையாக இந்திய அணியும், நாங்களும் இல்லைதான்.

பிறகு ஏன் நேரத்தை உங்கள் போட்டியைப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதை ஏற்கிறேன். ஐரோப்பிய அணிகளுக்கும் அந்த வீரர்களுக்கும் இணையாக நாங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால், நாங்கள் அந்த அளவுக்கு உங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்க முயற்சிப்போம். உங்களின் நேரத்தை மிகச்சிறப்பானதாக்க முயற்சிப்போம்.

என்னுடைய இந்த வீடியோ கால்பந்துப் போட்டிகளை பார்க்காதவர்களுக்காகத்தான். இந்திய கால்பந்து அணி மீதான நம்பிக்கையை இழந்தவர்களுக்கும், இந்திய அணி மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஆனது. அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், தயவு செய்து மைதானத்துக்கு வந்து கால்பந்து போட்டியைப் பாருங்கள்.

நீங்கள் கால்பந்தைப் போட்டியை நேரில் வந்து பாருங்கள், எங்களைக் களத்தில் விமர்சனம் செய்யுங்கள், திட்டுங்கள், சத்தமிடுங்கள், அதை வரவேற்கிறோம். ஆனால், தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்துக்கொண்டு, இன்டர்நெட்டில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள்.

நாங்கள் விளையாடும் அரங்கிற்கு வாருங்கள், எங்களைப் பார்த்து சத்தமிடுங்கள், திட்டுங்கள், விமர்சியுங்கள், எங்கள் முகத்தை நேருக்கு நேர் பாருங்கள். யாருக்குத் தெரியும் என்றாவது ஒருநாள் மாறும், நீங்கள் மாறுவீர்கள், கிரிக்கெட்டுக்காக உயிரைக் கொடுக்கும் நீங்கள் கால்பந்துக்காகவும் கோஷமிடுவீர்கள், தீவிரமான ரசிகர்களாக மாறுவீர்கள்.

உங்களுக்குக் கால்பந்து பற்றித் தெரியாமல் இருக்கலாம், ஆனால், எங்களுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும், உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். தயவு செய்து கால்பந்து போட்டிக்கு ஆதரவு தாருங்கள். ஜெய்ஹிந்த்''.

இவ்வாறு சுனில் சேத்ரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x