ஆயுஷ் பதோனி, பூரன் பொறுப்பான ஆட்டம்: ஹைதராபாத்துக்கு 166 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

ஆயுஷ் பதோனி | படம்: வேதன்
ஆயுஷ் பதோனி | படம்: வேதன்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 165 ரன்களைச் சேர்த்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயின்டன் டி காக் 2 ரன்களில் அவுட்டானார். அவரை விட கூடுதலாக 1 ரன்னை எடுத்து மார்கஸ் ஸ்டாயினிஸ் 3 ரன்களில் கிளம்பினார்.

கே.எல்.ராகுல் - கிருனல் பாண்டியா இணைந்து நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஆனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத ராகுல் 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து 24 ரன்களில் பாண்டியா ரன்அவுட். 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 102 ரன்களைச் சேர்த்திருந்தது.

ஆயுஷ் பதோனி - நிக்கோலஸ் பூரன் நிலைத்து ஆடி விக்கெட் இழப்புகளை தவிர்த்து ஸ்கோரை ஏற்ற முயன்றனர். 28 பந்துகளில் பதோனி அரைசதம் கடந்தார்.

இறுதி ஓவரில் பூரன் அடித்து ஆடியதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 165 ரன்களைச் சேர்த்துள்ளது. பதோனி 55 ரன்களிலும், பூரன் 48 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in