Published : 04 Apr 2024 08:49 AM
Last Updated : 04 Apr 2024 08:49 AM

ஐபிஎல் அலசல்: சுனில் நரைனிடம் டெல்லி அணி ‘கோட்டை விட்ட’ தருணங்கள்!

சுனில் நரைன்

விசாகப்பட்டிணத்தில் நேற்று (புதன்கிழமை) டெல்லி அணி அடைந்த துயரத் தோல்விகளுக்கு அந்த அணியின் சில தவறுகளே காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைனை தொடக்கத்தில் இறக்கும் முடிவை அடைந்த பிறகே அந்த அணி ஒரு பயங்கரமான காட்டடி அணியாக மாறி பிரம்மாண்டமாகியுள்ளாது என்பதை மறுக்க முடியாவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை டெல்லி பயன்படுத்தவில்லை அல்லது மூளை மழுங்கி கோட்டை விட்டது என்றே கூற வேண்டும்.

நரைன் 38 பந்துகளில் சிக்சர் மழையில் 85 ரன்கள் விளாசியிருக்கலாம் ஆனால் முதல் ரன்னை எடுக்க 6 பந்துகள் எடுத்துக் கொண்டார் என்பது தான் இதில் டெல்லி பார்க்க வேண்டிய அம்சமாகும். பிட்சில் கொஞ்சம் ஆரம்பத்தில் ஸ்விங் இருந்த போதே அவரை வீழ்த்தியிருக்க வேண்டும். இதில் ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசி டெல்லி பவுலர்கள் தவறிழைத்தனர்.

இதோடு பெரிய பிழை என்னவெனில் சுனில் நரைன் ஒரு பந்தை ஆடும்போது மிக மெலிதான எட்ஜ் ஆனால் ரிஷப் பண்ட்டிற்கும் கேட்கவில்லை, இஷாந்த் சர்மாவுக்கும் கேட்கவில்லை அப்பீலும் இல்லை ரிவியூவும் இல்லை. 13 பந்துகளில் 24 ரன்கள் என்று நரைன் இருந்த போதும் எட்ஜ் ஆனது, மிட்செல் மார்ஷ் மட்டையில் எட்ஜ் ஆனது போல் ஒலி கேட்டது என்று சொல்லி ரிஷப்பண்ட் ரிவியூ கேட்பதற்குள் 15 விநாடிகள்முடிந்து விட்டன. இது ரீப்ளேயில் க்ளீன் எட்ஜ் என்று காட்டப்பட்டது.

24 ரன்களில் போயிருக்க வேண்டிய சுனில் நரைனுக்கு வாழ்வளித்தது டெல்லி கேப்பிடல்ஸ் தன் தவறினால்தானே அன்றி வேறு காரணங்கள் இல்லை. இந்தத் தவறுகளுக்குப் பிறகு பந்தும் ஸ்விங் ஆகவில்லை. நரைனுக்கு நல்ல ரூம் கிடைக்குமாறு, விளாசுமாறு வீசினர், ஷார்ட் பிட்ச் முயற்சிகளில் பந்துகள் தோள்பட்டைக்கு எழும்பவில்லி, குட்டையாகவே எழும்பியது. நரைன் புகுந்து விளையாடி விட்டார். டெல்லி அணியில் காயம் காரணமாக முகேஷ் குமார் இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

பவர் ப்ளேயில் 88 ரன்கள் என்று ரிஷப் பண்ட் திருதிரு வென்று முழிக்க வேண்டியதாயிற்று. ரகுவன்ஷி இறங்கினார் இறங்கியவுடனேயே 2 அட்டகாச பவுண்டரிகள், ஒரு ரிவர்ஸ் ஸ்கூப்சிக்ஸ், 10 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து கேகேஆர் இன்னொரு 10 ஓவர் அதிக ஸ்கோர் சாதனையை நிகழ்த்தியது. நரைன் சதமெடுப்பார் என்று நினைத்த போது மிட்செல் மார்ஷின் தொடர் ஷார்ட் பிட்ச் பவுன்சர் முயற்சியில் நரைன் வெளியேறினார்,

நடுவர் அவுட் கொடுக்கும் முன்னரே அவரே வெளியேறினார், இதனை மிட்செல் மார்ஷ் பாராட்டினார். வாலு போச்சு கத்தி வந்துது டும் டும் கதையாய் நரைன் வெளியேற காட்டடி மன்னன் ரஸல் இறக்கப்பட்டார். ரஸல் இறங்கிய பிறகாவது ஸ்பின்னர்களை ட்ரை செய்திருக்கலாம் ஆனால் ரிஷப் பண்ட் செய்யவில்லை. கடைசியில் ரஸலும் விளாச 41 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மாவின் வாசிம் அக்ரம் பாணியிலான அன்பிளேயபிள் யார்க்கரில் பவுல்டு ஆனார். இந்த யார்க்கரை ரஸலே பாராட்டிவிட்டுச் சென்றார்.

பேட்டிங்கில் டெல்லி கேப்பிடல்ஸ் இந்த இலக்கை விரட்டும் நிலையில் எப்போதும் இல்லை. 33/4 என்று தொடக்கத்திலேயே சரிவு கண்டது, ரிஷப் பண்ட் இறங்கி 25 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 55 விளாசியது ஆறுதலாக இருந்தது, ரிஷப் பண்ட் டச்சிற்கு வருகிறார் என்றாலே சர்வதேச அணிகளுக்கு கிலி பிடிக்கும் விஷயம்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x