Published : 04 Apr 2024 08:24 AM
Last Updated : 04 Apr 2024 08:24 AM

குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்

கோப்புப்படம்

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதல் ஆட்டத்தை சொந்த மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடமும், 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடமும் தோல்வி கண்டது. இதில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சீராக வீசிய மயங்க் யாதவின் வேகப்பந்து வீச்சில் சரிந்தனர்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சு துறையிடம் மாறுபட்ட சவாலை பஞ்சாப் அணி எதிர்கொள்ளக்கூடும். அனுபவம் வாய்ந்த மோஹித் சர்மா வேகம் குறைந்த பந்துகள், வேகம் குறைந்த பவுன்ஸர்கள், வைடு யார்க்கர்கள் ஆகியவற்றை கையாள்வதில் சிறப்பாக செயல்படக்கூடியவர். இவர் தனது கலவையான பந்து வீச்சால் ஷிகர் தவண், ஜானி பேர்ஸ்டோ, ஜிதேஷ் சர்மா ஆகியோரை உள்ளடக்கிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடிதரக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களான நூர் அகமது, ரஷித் கான் ஆகியோரும் பஞ்சாப் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடை பகுதியில் காயம் அடைந்த ஆல்ரவுண்டான லியம் லிவிங்ஸ்டன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந் தேகம்தான். அவர், களமிறங்காத பட்சத்தில் பின்வரிசை பேட்டிங்கில் பஞ்சாப் அணி தேக்கத்தை சந்திக்கக்கூடும். பஞ்சாப் அணியின் பேட்டிங்கைவிட பந்து வீச்சு பலவீனமானதாக காணப்படுகிறது. அதிலும் முக்கியமாக இறுதிக்கட்ட ஓவர்களில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பவர்களாக திகழ்கின்றனர்.

ஹர்ஷால் படேல் ஓவருக்கு சராசரியாக 11.41 ரன்களையும், லெக் ஸ்பின்ரான ராகுல் சாஹர் சராசரியாக 11.37 ரன்களையும் வாரி வழங்கி உள்ளனர். இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர்களை வீசக்கூடிய அர்ஷ்தீப் சிங்கிடம் இருந்தும் இந்த சீசனில் மேம்பட்ட திறன் வெளிப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அனைத்து துறைகளிலும் உயர்மட்ட செயல்திறனை பஞ்சாப் அணி வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் பின்னர் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் அதன் பின்னர் வலுவான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

சாய் சுதர்சன் சீராக ரன்கள் குவித்து வருகிறார். டேவிட் மில்லர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்க்கக்கூடும். டாப் ஆர்டரில் ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா ஆகியோர் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தும் பட்சத்தில் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x