Published : 25 Mar 2024 04:51 PM
Last Updated : 25 Mar 2024 04:51 PM

டாஸ் முதல் கடைசி ஓவர் வரை... ஹர்திக் எதிர்ப்பு கோஷமும், ரோகித் ஆதரவு முழக்கமும்!

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது குஜராத் அணி.

மும்பை அணி வெற்றி பெற 169 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி. ஆனால், 162 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி 9 விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கம் எழுப்பிய சம்பவம்தான் போட்டியின் ஹாட் டாப்பிக்காக அமைந்தது.

ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் ரோகித் ரசிகர்கள் ஒருபக்கம் என்றால், குஜராத் அணியை விட்டு சென்றதற்காக ஹர்திக்கின் எதிர்ப்பாளர்களும் ஒருசேர ஹர்திக்கை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

டாஸ் போடுவதற்காக ஹர்திக் களத்துக்குள் நுழைந்தபோது தொடங்கிய ரசிகர்களின் எதிர்ப்பு முழக்கங்கள் அவர் கடைசி ஓவரில் அவுட் ஆன பின்பும் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவருக்கு எதிராக ரசிகர்கள் வசைபாடினர். உச்சகட்டமாக கடைசி ஓவரில் ஹர்திக் அவுட் ஆனதும் மொத்த மைதானமும் அவரது விக்கெட்டை கொண்டாடியது போட்டியின் ஹைலைட்டாக அமைந்தது.

அதேநேரம், ரோகித்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரின் பெயரை உச்சரித்து ஹர்திக்கை வெறுப்பேற்றினர். ரசிகர்களின் எதிர்ப்பை போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே பிரதிபலித்தார் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான கெவின் பீட்டர்சன். அதில், "ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக இங்கே ரசிகர்கள் கொந்தளித்தது போல் வேறு எந்த ஒரு இந்திய வீரருக்கும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நான் பார்த்ததில்லை" என்று பீட்டர்சன் கூறினார்.

ரசிகர்களை கடுப்பாக்கிய ஹர்திக்: இதற்கிடையே, போட்டியின்போது ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா நடத்திய விதமும் ரசிகர்களை அப்செட் ஆக்கியது. மும்பை ஃபீல்டிங்கின்போது ரோகித் சர்மா 30 யார்ட் வட்டத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவரை லாங்க்-ஆன் ஃபீல்டிங்கிற்கு செல்ல ஹர்திக் ஆவேச தொனியில் கூறினார்.

இதனை எதிர்ப்பாராத ரோகித் சர்மா பின்னால் திரும்பி பார்த்துவிட்டு ‘என்னையா கூறுகிறாய்?’ என்று அதிர்ச்சியுடன் கேட்க, அதற்கு ஆம் ஹர்திக் கூற அதன்படி பவுண்டரி லைனுக்கு அருகில் சென்று நின்றார். அவர் நின்ற இடத்தில் தள்ளி நிற்க சொல்லியும் ஹர்திக் ஆவேசம் காண்பிக்க, ரசிகர்கள் அப்செட் ஆகினர். பலரும் இந்த வீடியோவை வலைதளங்களில் பதிவிட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா இந்த சீசனில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா ட்ரேடிங் முறையில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு நேற்றைய போட்டியில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x