Published : 16 Feb 2024 01:58 PM
Last Updated : 16 Feb 2024 01:58 PM

ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவிப்பு

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் விரைவாக விக்கெட்களை இழந்தனர். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது இந்திய அணி.

இதன்பின் ரோகித் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் கூட்டணி அமைத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை சுலபமாக சமாளித்த இந்த இருவரும், ரன்கள் குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ரோகித் சர்மா 71 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஜடேஜா 90 பந்துகளை சந்தித்து அரைசதம் கடந்தார். தொடர்ந்து இருவரும் பார்ட்னர்ஷிப் மூலம் 150+ ரன்கள் சேர்த்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 53-வது ஓவரின்போது ரோகித் சர்மா சதத்தை பதிவு செய்தார். 157 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடினார். ரோகித் 131 ரன்களுக்கு அவுட் ஆன பின், அறிமுக வீரரான சர்பராஸ் கான் களமிறங்கினார். முதல்தர போட்டிகளில் என்ன பார்மில் இருந்தாரோ அதே பார்மை தனது முதல் போட்டியிலும் காண்பித்தார் சர்பராஸ் கான். எந்தவித பயமும், சலனமு இல்லாமல் இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்ட சர்பராஸ் கான் பவுண்டரிகளை விரட்டி தள்ளினார். தொடர்ந்து 48 பந்துகளில் தனது முதல் போட்டியில் முதல் அரைசதம் பதிவு செய்தார்.

எனினும், 62 ரன்கள் எடுத்திருந்தபோது மறுமுனையில் நிதானமாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 99 ரன்களில் இருந்தார். அப்போது ஜடேஜா சதம் எடுக்க உதவ நினைத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். சர்பராஸ் அவுட்டுக்கு பின்னர் ஜடேஜா சதம் விளாசினார். 200 பந்துகளை சந்தித்து சதம் விளாசினார் ஜடேஜா. இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் குல்தீப் யாதவ் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்திலும், ஜடேஜா 112 ரன்களில் ஜோ ரூட் பந்திலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் ரவிச்சந்திரன் அஸ்வின், துருவ் ஜூரல் இருவரும் கூட்டணி அமைத்தனர். நிதானமாக ஆடிய இக்கூட்டணி 70 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதனால் இந்திய அணி 400 ரன்களை தொட்டது. பின்னர் 37 ரன்களில் அஸ்வின் வெளியேற, 46 ரன்கள் சேர்த்த நிலையில் துருவ் ஜூரல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு அவுட் ஆனார். இறுதிக்கட்டத்தில் பும்ரா 26 ரன்கள் சேர்க்க 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட், ரெஹான் அகமது 2 விக்கெட் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x