Published : 12 Feb 2024 05:57 PM
Last Updated : 12 Feb 2024 05:57 PM

ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு - இந்தோனேசியாவில் சோகம்

ஜகார்த்தா: கால்பந்து போட்டியின்போது ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் களத்தின் நடுவிலேயே உயிரிழந்த சோக சம்பவம், இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நேற்று (பிப்.11) நடைபெற்றது. இந்தப் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

மின்னல் தாக்கியதன் காரணமாக கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்தது சக வீரர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. கால்பந்து வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.

கால்பந்து போட்டியின்போது இதுபோன்ற சோகமான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பிரேசிலின் கால்பந்து மைதானத்தில் நடந்த ஒரு போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 21 வயது வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 2022-இல், ஜார்க்கண்டின் கோமியா மாவட்டத்தில் உள்ள ஹசாரி கிராமத்தில் கால்பந்து போட்டியின்போது 19 வயது இளைஞன் மின்னல் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x