Published : 17 Nov 2023 06:58 AM
Last Updated : 17 Nov 2023 06:58 AM

28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: 13-வது தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில்இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் தொடரின்அனைத்து ஆட்டங்களும் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கிமைதானத்தில் நடை பெறுகிறது.மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் சத்தீஸ்கர், குஜராத், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், அசாம் அணிகளும், ‘சி’ பிரிவில் கர்நாடகா, பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணிகளும், ‘டி’ பிரிவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தராகண்ட் அணிகளும் ‘இ’ பிரிவில் பெங்கால், மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் ஆகிய அணிகளும், ‘எஃப்’ பிரிவில் ஜார்கண்ட், சண்டி கர், ஆந்திரா, கோவா அணிகளும், ‘ஜி’ பிரிவில் உத்தரப்பிரதேசம், புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான் அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் டெல்லி, ஒடிசா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் 25-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 28-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் பல்வேறு அணிகளுக்காக களமிறங்குகின்றனர்.

தொடக்க நாளான இன்று தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொள்கிறது. மற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேசம் - மணிப்பூர், மகாராஷ்டிரா - உத்தராகண்ட் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இத்தகவலை தமிழக ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் ஜே.மனோகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x