Published : 31 Dec 2017 11:05 AM
Last Updated : 31 Dec 2017 11:05 AM

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடர்: நீலாம்பாள், கேஎஸ்சி அணிகள் சாம்பியன்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடரில் சேலத்தில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளி 65 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் திருநெல்வேலியில் நடைபெறும் 2-வது கட்ட சுற்றுக்கு நீலாம்பாள் அணி தகுதி பெற்றது.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 72 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சேலத்தில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தின் இறுதி போட்டியில் நீலாம்பாள் மேல்நிலைப் பள்ளி -ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த நீலாம்பாள் அணி 20 ஓவர்களில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கே.மணிகண்டன் 37 ரன்கள் சேர்த்தார். ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் அணி தரப்பில் வி.சந்துரு 3, எம்.வெங்கடேஷன் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 124 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் அணி 13.2 ஓவர்களில் 58 ரன்களுக்கு சுருண்டது. நீலாம்பாள் அணி தரப்பில் பி.விக்ரம் 4, கே.மணிகண்டன் 3 விக்கெட்கள் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக விக்ரம் தேர்வானார்.

திருப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப் பள்ளி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஏகேஆர் அகாடமி சிபிஎஸ்சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றதுடன் 2-வது கட்ட சுற்றுக்கும் முன்னேறியது. முதலில் பேட் செய்த ஏகேஆர் அகாடமி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. ஆர்.இ.ரித்தீஷ் 50, வி.கார்த்திக் 22 ரன்கள் எடுத்தனர். எஸ்.கவுதம் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 113 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கே.எஸ்.சி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எஸ்.கோகுல் 45, ஜி.அனந்தகுமார் 34 ரன்கள் எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x