Published : 05 Nov 2017 11:20 AM
Last Updated : 05 Nov 2017 11:20 AM
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணி, சீனாவை எதிர்த்து ஆடுகிறது.
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிச் சுற்றில் ஜப்பான் அணியை 4-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் இந்திய அணிக்காக குர்ஜித் கவுர் 2 கோல்களையும், நவ்ஜித் கவுர், லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்ள உள்ளது.
முன்னதாக இத்தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. இதனால் இந்திய வீராங்கனைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கின்றனர். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும். முன்னதாக 2004-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இப்போட்டி குறித்து இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி கூறும்போது, “மகளிர் உலகக் கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெறவேண்டுமானால் ஆசிய கோப்பையை வென்றாக வேண்டும். எனவே இன்றைய போட்டியில் வெல்ல கடுமையாக போராடுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT