Last Updated : 29 Mar, 2023 01:22 PM

 

Published : 29 Mar 2023 01:22 PM
Last Updated : 29 Mar 2023 01:22 PM

பழநியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்.4-ல் தேரோட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பழநி மலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, முதல் நாளான இன்று (மார்ச் 29) காலை முதலே பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். ஆறாம் நாளான ஏப்ரல் 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாளான ஏப்ரல் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

இதனிடையே, இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x