Published : 30 Dec 2022 05:27 AM
Last Updated : 30 Dec 2022 05:27 AM

ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - நீள்முடி கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில், பகல் பத்து 7-ம் நாளான நேற்று நீள்முடி கிரீடம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று சேவை சாதித்த நம்பெருமாள். படம்: எம்.ஸ்ரீநாத்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் 7-ம் நாளான நேற்று நீள்முடி கிரீடம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மறுநாள் பகல் பத்து திருநாள் தொடங்கியது. பகல் பத்து திருநாளின் 7-ம் நாளான நேற்று உற்சவரான நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

இதில், நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை, முத்து மாலை, அடுக்குப் பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் காலை 7.30 மணிக்கு பகல் பத்து (அர்ச்சுன) மண்டபம் சென்றடைந்தார்.

அதைத்தொடர்ந்து, காலை 7.45 மணிக்கு அரையர் சேவை, பிற்பகல் 3.30 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி, மாலை 4.15 மணிக்கு வெள்ளிச்சம்பா அமுது செய்தல் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில்இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாளையும், முத்தங்கி சேவையில் மூலவர் ரங்கநாதரையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x