Last Updated : 11 Jun, 2015 03:32 PM

 

Published : 11 Jun 2015 03:32 PM
Last Updated : 11 Jun 2015 03:32 PM

கொடுத்து வாழ வேண்டும்

ஒரு தொழுநோயாளி, வழுக்கையர் மற்றும் பார்வையற்றவர் என மூன்றுபேரை சோதிக்க வானவர் ஒருவரை பூமிக்கு அனுப்பினான் இறைவன். மனித வடிவில் மாறி முதலில் தொழுநோயாளியைச் சந்தித்தார் அந்த வானவர்.

“இத்தனை நாள் வாழ்வில் நீ ஒரு நிம்மதியையும் அடைய வில்லை. இனி உனக்கு ஒரு குறையும் வராது. உனக்கு என்ன தேவையோ விருப்பமானவற்றை என்னிடம் கேட்கலாம்” என்கிறார்.

“ தொழுநோயால் அவதிப் பட்டு, உற்றார், உறவினரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் நான் இருப்பதற்குக் காரணமான இந்த நோயை முதலில் நீக்குங்கள். முடிந்தால் வானத்துக் கந்தர்வனைப் போல அழகிய தோற்றத்தில் மாற்றுங்கள்.” என்றார்.

மனித வடிவில் இருந்த வானவர், அவரது உடலைத் தடவினார். நோய் நீங்கியது. அவரது கோரிக்கைப்படி அழகிய தோற்றமும் கிடைத்தது.

“சரி.. உமது வாழ்வாதாராத்துக்கு என்ன வேண்டும்? அதையும் நீர் கேட்கலாம்” என்றார் வானவர்.

“ஒரு ஒட்டகம் இருந்தால் போதுமானது. அதைக் கொண்டு என் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்வேன்” என்றார் நோய் நீங்கியவர்.

“அப்படியா..? சரி இதை வைத்துக் கொள்ளுங்கள்” என ஒரு சினை ஒட்டகத்தை தொழு நோயாளிக்கு அளித்து அவரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

இரண்டாவதாக வழுக்கை யரைச் சந்தித்தார் வானவர். வழுக்கை அவரது முதல்தர பிரச்னை என்பதை அறிந்து கொண்டு வழுக்கை நீங்கி கருத்த முடியுள்ளவராக மாற்றிவிடுகிறார். வாழ்வாதாரத்துக்காக வழுக்கையருக்கு குட்டி ஈனும் நிலையிலுள்ள சினை மாட்டையும் தருகிறார்.

அவரையும் வாழ்த்திவிட்டு பார்வையற்றவரிடம் செல்கிறார்.

பார்வையற்றவர், மொத்த வாழ்வும் முடங்கிபோன நிலையில் பார்வை குறைபாட்டை நீக்கும்படி வானவரிடம் கேட்க அவரது குறைபாடும் நீங்கப்பெறுகிறது. திரும்பவும் பார்வை பெறுகிறார். வாழ்வாதாரத்துக்காக அவர் கேட்டது ஓர் ஆடு. அவருக்கு சினை ஆடு ஒன்றை அளித்துவிட்டு அவரையும் வாழ்த்திவிட்டு வானவர் சென்றுவிட்டார்.

சில ஆண்டுகள் கழிந்தன.

வானவர் அவரவர்க்கு அளித்த ஒட்டகம், மாடு மற்றும் ஆடு ஆகியவை மந்தைகளாக நூற்றுக்கணக்கில் பல்கிப் பெருகின. அவற்றைப் பெற்றவர்களின் வாழ்க்கைத் தரமும் செல்வச்செழிப்பாய் மாறிவிடுகிறது. இந்நிலையில், வானவர் மீண்டும் ஒரு வழிப்போக்கன் வடிவில் தொழுநோய் நீங்கி வாழ்வில் வளம் பெற்றவரைச் சந்தித்தார்.

“அய்யா, நான் ஒரு வழிப்போக்கன். வழிப்பயணத்தில் எனது செல்வம் முழுவதும் செலவாகிவிட்டது. ஊர் சென்று சேர முடியாமல் பெரிதும் தவிக்கிறேன். எனக்கு உங்கள் ஒட்டக மந்தையிலிருந்து ஒரே ஒரு ஒட்டகம் மட்டும் கொடுத்து உதவினால், ஊர் போய் சேருவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்” என்று பரிதாபமாக வேண்டி நின்றார்.

“என்ன? ஒரு ஒட்டகமா? அதன் மதிப்பு என்னவென்று உனக்குத் தெரியுமா? ஓராயிரம் பிரச்சினைகளுடன் ஏற்கனவே நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். உமக்கு ஒட்டகம் கேட்கிறதோ?” என்று கடுகடு முகத்துடன் ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்.

அவருக்கு இறைவன் அருளால் நோய் நீங்கிய ஞாபகமோ, செல்வச் செழிப்பை அடைந்ததற்கான காரணமோ நினைவிலேயே இல்லை. உதவிகேட்டு வந்த வழிப்போக்கனை அவர் விரட்டிவிட்டார்.

வழுக்கை நீங்கி, மாட்டு மந்தையால் பெரும் செல்வம் பெற்றவரிடமும் இத்தகைய அனுபவமே வழிப்போக்கர் வடிவிலிருந்த வானவருக்கு ஏற்பட்டது.

கடைசியாக, கண்பார்வை பெற்றவரிடம் வழிப்போக்கன் வடிவிலிருந்த வானவர் உதவிகேட்டுச் சென்றார். வழிப்போக்கர் வடிவிலிருந்த வானவரை அன்புடன் வரவேற்று உணவு படைத்தார் அந்த மனிதர்.

“சகோதரரே! உங்கள் துன்பம் என்னைப் பெரிதும் வருத்துகிறது. கவலைப்படாதீர்கள்! நானும் சில ஆண்டுகளுக்கு முன் பார்வையிழந்து, வாழ்வின் அடிமட்டத்தில் பெரும் துன்பம், துயரங்களையும் அனுபவித்தவன் தான். இறைவனின் பெரும் கிருபையால்தான், எனக்குக் கண்பார்வை கிடைத்தது. அதோ இந்தக் கணவாய் முழுவதும் நிரம்பி மேய்ந்து கொண்டிருக்கின்றனவே ஆடுகள் இவையும் அவனது பேரருளால்தான்.

அந்த ஆட்டு மந்தையில் உங்களுக்கு எத்தனை ஆடுகள் வேண்டுமோ அவற்றை எடுத்துச் செல்லுங்கள். ஆனால், நினைவிருக்கட்டும். நான் இவற்றை உங்களுக்கு கடனாக தரவில்லை. அதனால், நீங்கள் எனக்குத் திருப்பிதர வேண்டிய அவசியமும் இல்லை. எனது அன்பளிப்பாக எடுத்துச் செல்லுங்கள்!” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x