Published : 27 Jun 2019 11:20 AM
Last Updated : 27 Jun 2019 11:20 AM

தெய்வத்தின் குரல்: லேசில் திறந்து கொள்ளாத இருதயம்

கேள்வியறிவு பரோக்ஷம், அனுபவ அறிவு அபரோக்ஷம். அனுபவத்துக்கு வராத வரையில் ஒன்றைப் பற்றிய அறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரகசியமாக வைத்துக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

குற்றால அருவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் படிக்கிறோம். போய்விட்டு வந்தவர்கள், அதைப் பற்றி மணிக்கணக்காக வர்ணித்துக் கேட்கிறோம். ஆனாலும் இதனாலெல்லாம் அனுபவ ஆனந்தம் நமக்குக் கொஞ்சமாவது ஏற்படுகிறதா? நாமே போய், மணிக்கணக்கெல்லாம் வேண்டாம், நாலு நிமிஷம் அஞ்சு நிமிஷம் அதன்கீழே நின்றுவிட்டால் அப்போதுதானே நிஜமாக அதைத் தெரிந்துகொண்ட ஆனந்தம் ஏற்படுகிறது?

குருவே உபதேசம் பண்ணியுங்கூட, அது காதுக்குள்ளே, காது வழியாக மூளைக்குள்ளே போனாலுங்கூட, பிரயோஜனமில்லை. அதுவரை அபரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அனுபவமாகப் பேசணும். அப்போதுதான் அபரோக்ஷம்.

குரு உபதேசம் மூளை அளவில் மட்டும் ஏறுகிறபோது நமக்கு ரகசியமாக இருக்கிற மாதிரி தோன்றவில்லை. மூளைக்கு நன்றாக விஷயம் தெரியத்தான் தெரிகிறது. ஆனாலும் அது உயிரின் அனுபவமாக இல்லாததால் அதை பரோக்ஷ ஞானம் என்றே வைக்கவேண்டும்.

எப்போது அது உயிருக்கு உள்ளேயே போய் அனுபவமாகிறதோஅப்போதுதான் அதற்கு அபரோக்ஷ அனுபூதி என்ற பெயர் கொடுத்திருக்கறது. இதிலேதான், முரண் மாதிரி இருக்கும் வேடிக்கை! வெளிப்பட குருவாக்கியம் நன்றாகத் தெரிந்து, மூளைக்கு அது எட்டும்போது, அதற்கு ‘ஒளித்துவைத்தது’, ‘ரகசியமானது’ என்று அர்த்தம் கொடுக்கும் ‘பரோக்ஷ’ப் பட்டம் ஒட்டிக்கொண்டிருக்கிறது! பரம ரகசியமாக இருக்கப்பட்ட உயிரின் உள்ளுக்குள்ளே அதுவே தோய்ந்து, உறைந்துபோய், வெளிப்படத் தெரிகிற வாக்கு, மூளை எல்லாம் மறைந்து போனபோதுதான் ‘அபரோக்ஷம்’ என்று, அதாவது நன்றாக, வெளிப்பட பிரகாசிப்பதாகப் பட்டம் பெறுகிறது.

நிஜமான அனுபவம்

இது எப்படி சரி என்றால், பால் ருசி யாக இருக்கிற வஸ்து என்று நமக்குத் தெரியும். வெல்லமும் ருசியான வஸ்து என்று தெரியும். அதனால், பாலையும் வெல்லத்தையும் போட்டு நன்றாக சாரம் திரண்டு வரும்படி இறுகக்காய்ச்சினால் அந்தத் திரட்டுப் பால் படுருசியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது.

அதாவது, மூளைக்குத் தெரிகிறது. இப்படி மூளையால் நிச்சயப்படுத்தித் தெரிந்துகொண்டுவிட்டாலும் அதனால் திரட்டுப்பாலில் உண்டாகிற ருசியனுபவம் கிடைத்து விடுகிறதா? திரட்டுப்பாலின் பலனான அந்த இன்பத்தை அடைய என்ன பண்ண வேண்டும்? தின்று பார்க்கவேண்டும். வெளியிலே தெரிகிற திரட்டுப்பாலை உள்ளே தள்ளுகிறபோதுதான் அதைப் பற்றிய சரியான, நிஜமான அனுபவம் உண்டாகிறது.

இங்கே வெளிப்பட இருந்த வஸ்து மறைந்து போய் உள்ளுக்குள்ளே ரகசியமாக ஆன பிறகுதானேஅதனால் என்னபயனோ, அது எந்த லக்ஷ்யத்தை உத்தேசித்து செய்யப்பட்டதோ அது பூர்த்தியாகிறது? உள்ளுக்குள்ளே போனபின் அதன் ரூபம் மறைந்தாலும், அதன் பயன் அப்போதுதானே வெளிப்படுகிறது?

அதாவது ‘உள்’, ‘வெளி’ என்பதில் இரண்டுவிதம் இருப்பதாகத் தெரிகிறது. ரூபத்தினால் வெளிப்பட ஒன்று இருக்கிறபோது அதனுடைய சாரமான பயன் பிரகாசிக்காம லிருக்கிறது. பிரகாசிக்காமலிருக்கிறது என்றால் ரகசியமாக ஒளிந்து கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதாவது வேதாந்த பரிபாஷைப்படி அது ‘பரோக்ஷ’ மாகத்தானிருக்கிறது. உள்ளே போய் அதன் ரூபம் மறைந்து விடுகிறபோது அதன் சாரமான பிரயோஜனம் பிரகாசித்து ‘அபரோக்ஷ’ மாகிறது.

உள்சாரம்தான் முக்கியமா?

ஒரு வஸ்து ஸ்தூலத்தில் தெரிந்துகொண்டிருந்தாலும் அதனால் கிடைக்கக்கூடிய சாரமான பிரயோஜனம் கிடைக்கவில்லை என்றால் அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான். அது ஸ்தூலமாகத் தெரியாவிட்டாலும், அதன் பிரயோஜனம் நன்றாக வெளிப்பட்டுத் தெரிகிறது என்றால் அப்போதுதான் அதற்குப் பொருள் உண்டு.

வஸ்துவின் வெளிவேஷத்தைவிட அதன் உள் சாரம்தான் முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டோமானால் – இதை யாரும் ஒப்புக்கொள்ளாமலிருக்க முடியாது – அந்த சாரம் வெளியாகாத நிலையே நிஜத்தில் பரோக்ஷம், சாரம் வெளியாகிப் பயன் தரும் போதே அபரோக்ஷம் என்று ஏற்பட்டுவிடும்.

கோட்டான் கண்ணுக்கு வஸ்துக்கள் ராத்திரியில்தான் தெரிகிறது. பகலில் அதற்கு எதுவும் தெரிவதில்லை. மனுஷக் கண்ணுக்குப் பகலில்தான் தெரிகிறது. ராத்திரியில் தெரிவதில்லை. மூளைக்கு அனுபவம் தெரிவதில்லை. அதற்குத் தர்க்கத்தையொட்டி விசாரிக் கிற அறிவு வாதம்தான் தெரியும். அனுபவம் தெரிகிற இதயத்துக்கு அறிவு வாதம் தெரிவதில்லை. ஜீவனின் சார சத்தியமான உயிரைத்தான் இதயம் என்பது.

நாம்தான் திண்டாடுகிறோம்

ஆனாலும் இதயம் லேசில் திறந்து கொள்வதில்லை. எதனாலோ மனுஷ்யர்களுக்கு மூளைப் பெருமையையே பெரிசாக வைத்திருக்கிறது. அதனால் எதுவுமே முதலில் புத்தியில், மூளையில் உறைத்தாக வேண்டியிருக்கிறது. இதயமே அனுபவிக்க வேண்டிய ஆத்யாத்மிக விஷயங்களைக்கூட மூளை சரியாயிருக்குமா இருக்காதா என்று எடைபோட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறது.

சரியாயிருப்பதாக அது முடிவு பண்ணினால் அதற்கப்புறமே, ‘இப்படி நாம் அறிவினால் முடிவுபண்ணினது போதாது. இதனால் அந்த விஷயத்தின் லக்ஷ்யமான பிரயோஜனம் நமக்குக் கிடைத்துவிடவில்லை. உதாரணமாக, ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபமாகத்தான் இருக்க வேண்டுமென்று இத்தனை வேதாந்தப் புஸ்தகங்களைப் படித்து, குரு உபதேசங்கள் கேட்டு புத்தியினால் புரிந்துகொண்ட போதிலும் நமக்கு சத்தும் தெரியலை, சித்தும் தெரியலை, ஆனந்தமும் தெரியலை.

அசடு மாதிரி துக்கப்பட்டுக் கொண்டுதான் கிடக்கிறோம். அதனால் புத்திக்குள் போனதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை இதயத்துக்குள் இறக்கிக் கொள்ளவேண்டும்’ என்று நினைக்கிறோம்.

மூளை தான் பண்ணவேண்டியதை யெல்லாம் பண்ணியும் சாரமான பிரயோஜனத்தை அடைய முடியாமல் களைத்து விழுந்த அப்புறம்தான் இதயத்தைத் திறந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் பிறக்கிறது. இது மனுஷ்ய ஜீவனுக்குத் தன்னுடைய மூளை விசேஷத்தினால் உண்டான விபரீதமான பலன்! அவ்வளவாக புத்திபோதாமலிருக்கிற எளிய ஜீவன்களைவிடப் புத்திமான்களுக்குத்தான் இதன் கஷ்டம் ஜாஸ்தியாக ஏற்படுகிறது.

அவர்கள் (எளிய ஜீவர்கள்) புத்தியால் குடையாமல், ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ‘புத்திசாலி’ களான நாம்தான் திண்டாடுகிறோம். ஏதோ சில சமயத்தில் நமக்கும் ‘இதையெல்லாம் நம்முடைய மூளையால் எடைபோட்டுத் தீர்மானம் பண்ணிவிட முடியாது’ என்று தோன்றுகிறது. எல்லாம் நம்முடைய மூளையின் ஆணையெல்லைக்குள் வந்துவிட முடியுமா என்று தோன்றுகிறது.

( தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x