Published : 22 Apr 2024 07:25 PM
Last Updated : 22 Apr 2024 07:25 PM

சித்திரைத் திருவிழா: மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை 

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு திங்கள்கிழமை மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.51 மணியளவில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான ஏப்.21-ல் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் மதுரைக்கு பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று புறப்பட்டார். பின்னர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என வழிநெடுகிலுமுள்ள கிராமங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

இன்று (ஏப்.22) அதிகாலை 5.30 மணியளவில் மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடிக்கு கள்ளழகர் வருகைதந்தபோது, பக்தர்கள் ஆயிரக்கணக்கான கள்ளழகரை வரவேற்று எதிர்சேவை செய்தனர்.

இதுவரை கிராமப்புற மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இன்று முதல் மாநகராட்சிப் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அதனைத்தொடர்ந்து புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் வழியாக அவுட்போஸ்ட் , தல்லாகுளம் அம்பலகாரர் மண்டகப்படியில் இன்று மாலையில் எழுந்தருளினார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை என அரசுத்துறை சார்பிலான மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதனால் கள்ளழகர் எழுந்தருளும் பகுதிகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது. நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர்களும் கருப்பசாமி, கள்ளழகர் வேடமணிந்து திரியாட்டம் ஆடி வரவேற்றனர். வழிநெடுகிலும் தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் உள்ளிட்ட குளிர் பானங்கள் வழங்கினர்.

இரவு 8 மணிக்குமேல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் கள்ளழகர் தங்குகிறார். பின்னர் இரவு 11.30 மணிக்குமேல் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை சாற்றி அருள்பாலிக்கிறார். ஏப்.23 அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு எழுந்தருள்கிறார். பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருள்கிறார்.

பின்னர் முக்கிய நிகழ்வான சித்திரை பவுர்ணமியில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் நாளை (ஏப்.23) அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். முன்னதாக அவரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கிறார்.

அங்கு வைகை ஆற்றிலும் கரைகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசிப்பார்கள். அங்கு வையாளி ஆகி வீரராகவப்பெருமாளுக்கு மாலை சாற்றுதல் நடைபெறும். இந்துசமய அறநிலையத்துறை மண்டகப்படியிலும் எழுந்தருள்கிறார். பின்பு வைகை ஆற்றிலிருந்து காலை 7.30 மணியளவில் வைகை ஆற்றிலிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் செல்லும் கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சுவர்.

பின்னர், அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருள்கிறார். ஏப்.24-ல் வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார். இதனால் மாநகரமே விழாக்கோலமாய் காட்சி அளிக்கிறது. மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x