Published : 22 Apr 2024 05:59 AM
Last Updated : 22 Apr 2024 05:59 AM

சித்திரைத் திருவிழா 3-ம் நாள் | அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்பாடு: மூன்றுமாவடியில் இன்று எதிர்சேவை

அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 3-ம் நாளானநேற்று மாலை அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகருக்கு இன்று மாலை மூன்றுமாவடியில் மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து, மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை (ஏப்.23) அதிகாலை நடைபெறுகிறது.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ம் தேதி சுந்தரராஜபெருமாள் காப்புக் கட்டுதல், திருவீதி உலாவுடன் தொடங்கியது. 2-ம் நாள் (ஏப்.20) கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள்சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 3-ம் நாளான நேற்று காலை தோளுக்கினியானில் சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளினார்.

பின்னர், மாலையில் மண்டூகமுனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக கோயிலிலிருந்து தங்கப்பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர்வேடத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரைக்குப் புறப்பட்டார். அங்கு ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை நடந்தது. கருப்பணசாமியின் உத்தரவு பெற்று மதுரைக்கு கள்ளழகர் மாலை 6.25 மணிக்கு புறப்பட்டார்.

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்.

அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் தரிசனம் செய்து வழியனுப்பி வைத்தனர். இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு, கோயில் துணை ஆணையர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோயில் கோட்டைவாசலை கடந்து பொய்கைக்கரைப் பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதிஎன வழிநெடுகிலும் கிராமங்களி லுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.

இன்று (ஏப்.22) அதிகாலை 5.30மணியளவில் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தங்குகிறார்.

பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து அருள்பாலிக்கிறார். அதன்பின், தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம்பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருள்கிறார்.

பின்னர் முக்கிய நிகழ்வாக சித்திரை பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் நாளை (ஏப்.23) அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். அங்கு வைகை ஆற்றிலும், கரைகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை காத்திருந்து தரிசிப்பார்கள்.

வைகை ஆற்றிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்பட்டு ராமராயர் மண்டபம் செல்லும் கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சுவர். பின்னர், அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவ பெருமாள்கோயிலில் இரவு எழுந்தருள்கிறார்.

ஏப்.24-ம் தேதி வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். ஏப்.25-ம் தேதி பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். ஏப்.26-ம் தேதி கள்ளழகர் அழகர்மலைக்குப் புறப்பாடாகிறார். ஏப்.27-ல் காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். ஏப்.28-ல் உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடா சலம், கோயில் துணை ஆணையர்லெ.கலைவாணன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x