Published : 18 Dec 2017 09:39 AM
Last Updated : 18 Dec 2017 09:39 AM
திருப்பாவை - 3
ஓங்கிஉலகளந்தஉத்தமன்பேர்பாடி
நாங்கள்நம்பாவைக்குச்சாற்றிநீராடினால்
தீங்குஇன்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து
ஓங்குபெறும்செந்நெல்ஊடுகயல்உகளப்
பூங்குவளைப்போதில்பொறிவண்டுகண்படுப்பத்
தேங்காதேபுக்குஇருந்துசீர்த்தமுலைபற்றி
வாங்கக்குடம்நிறைக்கும்வள்ளல்பெரும்பசுக்கள்
நீங்காதசெல்வம்நிறைந்தேலோர் எம்பாவாய்.
கிருதயுகத்தில், மகாபலிச் சக்கரவர்த்தியின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, மகாபலியிடம் மகாவிஷ்ணு, மூன்றடி மண் கேட்டதும் அப்போது ஓரடியில் உலகையே அளந்ததும் நாம் அறிவோம்தானே!
பிரமாண்டமாய், விஸ்வரூபமெடுத்து உயர்ந்து திருக்காட்சி தந்த திருமாலின் திருநாமத்தை உச்சரித்தபடி நாம் நோன்பு நோற்றால்... தேசத்தில் மாதம் மும்மாரி மழை பெய்யும்! அதுவும் எப்படி? தீங்கின்றி நாடெல்லாம்... என்று பாடுகிறாள் ஆண்டாள். அதாவது, தேவையான காலத்தில், தேவையான அளவு, யாருக்கும் எதற்கும் எந்தத் தீங்கும் நேராத வகையில் மழை பெய்யும் என்கிறாள்.
நெற்கதிர்களும் மற்ற விளைபொருட்களும் தகுந்த மழையால் நன்றாக விளையும். அதிகாலையில், வண்டுகள் குவளைமலரில் வந்து தேன் குடித்து உறங்கும். பசுக்கள், தன் மடியில் உள்ள பாலை, ஆயர்கள் கொண்டு வரும் பால்குடத்தில், அதாவது, கறக்க ஆரம்பித்ததும் தாமாகவே சுரந்து, பாத்திரத்தை நிரப்புமாம்! ஆகவே, இவை வள்ளல்பெருமான்களுக்கு இணையானதாக இருக்கின்றன என்று சிலாகிக்கிறாள் ஆண்டாள்.
இப்பேர்ப்பட்ட பசுக்களும் செல்வங்களும் நீங்காதவராக கொண்டு இருக்க, இனிமையாய் வாழ, பாவை நோன்பு இருப்போம் வாருங்கள் என்று மற்ற பெண்களை அழைக்கிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடலை, ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடலைப் பாடுங்கள். இந்த நாள் என்றில்லாமல், எல்லா நாளும் பாடுங்கள். சகல செல்வங்களும் பெற்று, சுபிட்சத்துடன், லக்ஷ்மி கடாட்சத்துடன் இனிதே வாழலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT