Last Updated : 03 Nov, 2017 04:51 PM

 

Published : 03 Nov 2017 04:51 PM
Last Updated : 03 Nov 2017 04:51 PM

நெல்லையப்பரே சரணம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில், தொடங்கி விட்டது ஐப்பசி திருக்கல்யாண வைபவ விழா. இந்த வேளையில், நெல்லையப்பர் கோயிலின் சிறப்புகளையும் புராண புராதனப் பெருமைகளையும் பார்ப்போம்.

திருஞானசம்பந்தர், இங்கு வந்து சிவனாரை பதிகம் பாடி போற்றியிருக்கிறார் என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்... இந்தத் தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய தலம் என்பதை! அப்போதும் இப்போதும் தலத்தின் பெயர் மாறவே இல்லை. அந்தத் திருத்தலம்... திருநெல்வேலி!

ஞான சம்பந்தரால் சமண சமயத்திலிருந்து சைவசமயத்துக்கு மாறி,  சிவபக்தி செலுத்தி வந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியாரும் சிவபக்தியில் திளைத்திருந்தார். அப்போது நெல்லைச் சீமையில் வாழ்ந்து வந்த வேளையில், அவரது நண்பர் தன் புதல்வனை,  பெண் என்று மறைத்துச் சொல்லியபடியே பெண்ணாகக் கண்டார். பிறகு இறைவனின் பேரருளால் அந்த நண்பருக்கு மற்றுமொரு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து அவர்களைக் கொண்டும் சிவனாரின் துணையைக் கொண்டும் வடதேசத்து அரசனை வென்றார். அதையொட்டி, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, ஆலயத்துக்கு மணிமண்டபம் எழுப்பி, திருப்பணிகள் செய்தார் மன்னன்!

திருநெல்வேலி ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பிரமாண்டமாக அமைந்து உள்ளது நெல்லையப்பர் கோயில். இங்கே இருந்தபடி அகிலத்து மக்களுக்கு அருள்பாலிக்கும் சிவனாருக்கு நெல்லையப்பர் என்பது திருநாமம். அவர் நெல்லை வேலியிட்டு காத்தருளினார் என்பதால் ஸ்வாமிக்கும் ஊருக்கும் அதுவே பெயராயிற்று.

அகத்திய மாமுனிவர், சிவனாரின் உத்தரவுப்படி பொதிகைமலைக்கு வந்தார். இவரால் பூமியும் சமநிலைக்கு வந்தது. அதுமட்டுமா? கங்கை நீரைக் கொண்டு, இங்கே தாமிரபரணியை, பொருநை நதியை உண்டுபண்ணினார் என்கிறது நெல்லைப்புராணம்.

அகத்தியர் மனைவி லோபாமுத்திரை திருச்செந்தூர் வேலவனை வணங்கி முக்தி பெற்றாள். அகத்திய முனி, வேணுவனமாகத் திகழ்ந்த திருநெல்வேலியை அடைந்து நெல்லையப்பர் தலத்தில் சிவபார்வதியின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எனவே திருநெல்வேலி திருத்தலம், மிகத் தொன்மையான, புராண & புராதனப் பெருமைகள் கொண்ட தலம் எனப் பெருமை கொள்கிறார்கள் பக்தர்கள்! .

நைமிசாரண்ய முனிவர்களுக்கு இந்தத் தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகியவற்றின் பெருமையையும் இங்கு வந்து தரிசித்து முக்தி அடைந்தவர்களின் விவரங்களையும் விரிவாகச் சொல்லி அருளினார் சூதமுனிவர். வடமொழியில் இருந்த தலபுராண மகாத்மியத்தை, பின்னாளில் நீலகண்ட சாஸ்திரியார் உதவியால் தமிழில் பாடியவர் நெல்லையப்பபிள்ளை என்ற புலவர். மிகுந்த சிவபற்று உடையவர். சிவபெருமானே இவரைப் பாடச் சொல்லிக் கேட்டதாக தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

நெல்லையம்பதியின் தலபுராணத்தையும் பக்தி கொண்டிருந்தவர்களையும் இகழ்ந்த நாகப்பன் என்பவன், குன்ம நோயால் அவதிப்பட்டான். பிறகு தன் தவறை உணர்ந்தவன், தல புராண சருக்கங்களைப் படித்து, சிவானரைத் தொழுது, நோய் நீங்கப்பெற்றான்.

நான்கு வேதங்களும் ஒருமுறை சிவனாரிடம் வந்தன. ‘மரமாகத் திகழ்ந்து நிழலைத் தந்து, நித்தியமாய் இருக்க வேண்டும். அதற்குத் தாங்களே அருளவேண்டும்’ என வேண்டின. ‘யாம் திருநடனம் புரியும் 21 தலங்களில், தென்காஞ்சி என்று போற்றப்படும் நெல்லையம்பதியில் வேணுவாக அமருங்கள். அங்கே லிங்கத் திருமேனியாக எழுந்தருள்வேன்’ எனச் சொல்லி அருளினார் ஈசன். வேணு என்றால் மூங்கில். வேதங்கள் சிவனார் சொன்னபடி, வேணுவாக, மூங்கில் மரங்களாக இந்த வனத்தில் வந்து அமர்ந்து கொள்ள, அதுவே பின்னாளில் நெல்லையம்பதி எனும் புண்ணியத் தலமாயிற்று என்கிறது ஸ்தல புராணம்!

ஸ்ரீராமபிரான், மாரீசனாகிய மாயமானைத் தொடர்ந்து சென்ற போது, வழியில் கயத்தாறு எனும் பகுதியில் வில்லினால் கீறிப் பொருநையை, தாமிரபரணியை வரச் செய்தார். அதேபோல் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மானூர் எனும் பகுதியில், மாயமானைக் கொன்ற பிறகு சீதாதேவியைத் தேடி அலைந்தார் என்றும் பிறகு நெல்லையப்பரை வணங்கி வரம் பெற்று, ராமேஸ்வரம் சென்று வழிபட்டார் என்றும் அதையடுத்து ராவணனை வென்று, சீதையுடன் அயோத்திக்குச் சென்றார் ஸ்ரீராமர் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

இப்படி பெருமைகள் கொண்ட திருத்தலமாகத் திகழ்கிறது நெல்லையப்பர் கோயில். இந்தக் கோயிலில், இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது ஐப்பசி திருக்கல்யாண உத்ஸவப் பெருவிழா. தினமும் காலையும் மாலையும் சிறப்பு அலங்காரங்கள், வீதியுலாக்கள், விசேஷ பூஜைகள் என அமர்க்களப்படும் என்கின்றனர் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x