Last Updated : 31 Oct, 2017 12:14 PM

 

Published : 31 Oct 2017 12:14 PM
Last Updated : 31 Oct 2017 12:14 PM

ஏழு ஜென்ம பாவம் தீர்ப்பார் லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர்!

லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, அவரை ஆத்மார்த்தமாக வணங்கித் தொழுதால், நம் ஏழு ஜென்மப் பாவங்களையும் போக்கியருள்வார் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.

திருச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது லால்குடி. இங்கே அமைந்து உள்ள பிரமாண்டமான ஆலயத்தில், குடிகொண்டிருக்கிறார் சப்தரிஷீஸ்வரர். ஞானமும் யோகமும் தரும் அற்புதமான திருத்தலம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

பேருந்து நிலையத்துக்கும் லால்குடி ரயில் நிலையத்துக்கும் அருகிலேயே அமைந்துள்ளது திருக்கோயில். பரத கண்டத்தில் ஏழு முனிவர்கள், ஆதி முனிவர்கள் என்றும் அவர்களைக் கொண்டே கோத்திரங்கள் உருவானதாகவும் சொல்கிறது புராணம். இவர்களை சப்தரிஷிகள் என்பார்கள். இந்த ஏழு முனிவர்களும் ஒன்றாக வந்து, இந்தத் தலத்தில் தங்கி, தினமும் சிவபூஜை செய்து, கடும் தவம் மேற்கொண்டனர்.

சப்தரிஷிகளும் தவமிருந்து இறைவனைத் தொழுததால், இங்கே உள்ள சிவனாருக்கு சப்தரிஷீஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

எனவே எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கோத்திரமே அறியாதவர்களாக இருந்தாலும் அமாவாசை, பௌர்ணமி முதலான நாளில் இங்கு வந்து சிவபெருமானை, ஸ்ரீசப்தரிஷீஸ்வரரை மனதாரப் பிரார்த்தித்து, முடிந்தால் அவருக்கு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், நம் ஏழு ஜென்மப் பாவமும் தீரும். ஞானமும் யோகமும் பெறலாம். முக்தி கிடைப்பது நிச்சயம் . முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x