Last Updated : 09 Jun, 2019 08:37 PM

 

Published : 09 Jun 2019 08:37 PM
Last Updated : 09 Jun 2019 08:37 PM

மன அழுத்தம் தேசியப் பிரச்சினையா? தவிர்ப்பதற்கான 10 ஆலோசனைகள்

ரமேஷும் ராஜேஷும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். அப்ரைசல் நேரம் என்பதால் இருவருக்கும் ஒரே மாதிரியான சவாலை மேனேஜர் கொடுத்தார்.

ராஜேஷ் ஒரு லட்சம் ரூபாயை ஒரே நாளில் எப்படி அடைக்கச் சொல்ல முடியும்? என்று பதற்றமடைந்தார். தன்னால் முடியாது என்ற கவலையில் நொந்து போனார். அலுவலக சூழலை நினைத்து கோபப்பட்டார். அந்த எரிச்சலை வாடிக்கையாளர்களிடம் காட்டினார். இதனால் வாடிக்கையாளர்களைச் சரியாகக் கையாளத் தெரியாதவர் என்று கெட்ட பெயர் எடுத்தார்.

ரமேஷ் அந்த சவாலுக்காகக் காத்திருந்தார். இலக்கை நோக்கிச் செல்வது குறித்து சரியாகத் திட்டமிட்டார். எந்த எரிச்சலையும் காட்டாமல், வாடிக்கையாளர்களிடம் புன்முறுவலுடன் பேசினார். ஒரு லட்சம் பணம் தான். ஆனால், ஒரே வாடிக்கையாளர் இல்லையே, பல வாடிக்கையாளர்கள்தானே என்று சவாலுக்குள் இருக்கும் சூட்சுமத்தால் உற்சாகமானார். கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டிய பணத்தைக் கட்ட வைத்தார். அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது.

ராஜேஷ் பதவி உயர்வு கிடைக்காத மன அழுத்தத்தில் அவதிப்பட்டார். ரமேஷுக்கும் ராஜேஷுக்கும் ஒரே பிரச்சினை தான். சவால் ஒன்றுதான். அதை எப்படிப் பார்த்தார்கள், கையாண்டார்கள் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.

ராஜேஷைப் போல சாமானியர் முதல் சாதனையாளர் வரை எந்த மனிதரையும் விட்டு வைக்காத ஒன்று மன அழுத்தம். அதைக் கையாளத் தெரிந்தவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

* 30 கோடிக்கும் அதிகமான மக்கள், அதாவது  உலக மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு 2015–ல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

* 2015-க்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 1945-க்குப் பிறகு பிறந்தவர்கள் 10 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், உலக அளவில் தற்கொலை விகிதம், 25 சதவீதம் குறைந்துள்ளது. 1990-ல் 1,00,000 பேருக்கு 14.55 என்ற நிலையிலிருந்த தற்கொலை விகிதம், 2016-ல் 1,00,000 பேருக்கு 11.16 ஆகக் குறைந்துள்ளது.

* இந்தியாவில் 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது.

* இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இதுவரை 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்துவருவது கவலையளிக்கிறது.

* பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர்.

* மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சிக்கவும் செய்கிறார்கள்.

* இந்தியாவில் 4 லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மொத்தமே சுமார் 4,000 மனநல மருத்துவர்களும், 1,000 மனநல ஆலோசகர்களும்தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மன அழுத்தத்துக்கான பொதுவான, சிறப்புக் காரணங்கள், விடுபடுவதற்கான வழிகள் குறித்து மனநலத் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.ராமானுஜத்திடம் பேசினோம்.

''மன அழுத்தம் என்பது ஒரு நோய்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. மன அழுத்தம் என்பது ஒரு காரணி. அதனால் ஏற்படும் விளைவுதான் மனச்சோர்வு.

மன அழுத்தம் மூன்று காரணங்களால் ஏற்படுகிறது. 

> உடல்ரீதியான காரணம் - பரம்பரை மரபணுக்கள் மூலமும் வரலாம்.

> தனிநபர் காரணம் - பொழுதுபோக்கு இல்லாதது, நண்பர்கள் இல்லாதது, ஆளுமை, தாங்க முடியாத சுமை , பிரச்சினைகளைக் கையாளத் தெரியாதது.

> சமூகக் காரணம் - பொருளாதாரம், எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்ய முடியாமை

பொதுவாக மன அழுத்தம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. நீட் தேர்வு விஷயத்தை எடுத்துக்கொண்டால் கூட அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா என்று மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பட்டியலிடலாம். ஆண்கள் மன அழுத்தத்தில் இருந்தாலும் அவர்களுக்கு வடிகால்கள் உள்ளன. நண்பர்களிடம் பகிர்வது, தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்வது என  தங்கள் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். பெண்கள் அப்படியல்ல. மனதுக்குள் போட்டு அவர்களைக் குழப்பிக்கொள்கிறார்கள்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதையோ பறிகொடுத்த மாதிரி இருப்பார்கள். எதிலும் முழு ஈடுபாடு காட்ட மாட்டார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.

மன அழுத்தத்தில் நல்ல மன அழுத்தம், கெட்ட மன அழுத்தம் என இரு வகைகள் உள்ளன.  ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது. நம் பிரச்சினையை, குறையை இனம் கண்டுகொண்டு தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெற்றி பெற நல்ல மன அழுத்தம் உதவுகிறது.

மன அழுத்தம் தரும் வேகம்  ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது. கெட்ட மன அழுத்தம் இருந்தால் எதிர்மறையாகவே தோன்றும். குறுகலான பார்வையுடனே சிந்திப்பார்கள். திறமையில்லை, படிக்க முடியவில்லை, நம்மால் சாதிக்க முடியாது என்று நெகட்டிவ் சிந்தனைகளிலேயே மூழ்கி இருப்பார்கள்.

அதிக எதிர்பார்ப்பும், தன் பிம்பம் உடையும் ஈகோவுமே மன அழுத்தத்திற்கான பொதுவான காரணங்கள். சின்ன சுடுசொல் கூறினாலும், திட்டினாலும் சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். முகநூலில் 5,000 நண்பர்கள் இருக்கலாம். ஆனால், ஆறுதல் கூற அர்த்தமுள்ள விஷயங்களைப் பகிர, உணர்வுகளைப் புரிந்துகொள்ள உண்மையான நண்பர்கள் ஒரு சிலர் கூட இருக்க மாட்டார்கள்.

இப்போதெல்லாம் நான்கு பேர் குழுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் செல்போனில் தனித்தனியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரம்மாண்டமானதுதான். ஆனால், அது பக்கத்தில் இருப்பவர்களை அந்நியப்படுத்தி இருக்கிறது. உரையாடுதல், தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்றவை உடனிருக்கும் நபர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளாததுதான் மன அழுத்தத்துக்கான முக்கியமான காரணம்.

சென்ற தலைமுறையில் வாழ்க்கைத் தரம் வேறு மாதிரி இருந்தது. இந்த தலைமுறையில் கார், சொந்த வீடு உள்ளிட்ட வசதிகள் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், போட்டி மனப்பான்மையில் முதலிடம் வர வேண்டும் என்கிற அதீத அழுத்தமுமே மன அழுத்தத்துக்கான வாய்ப்பு வாசல்கள்.

என்னிடம் 10-ம் வகுப்பு முடித்த மாணவர் ஒருவர் கவுன்சிலிங் வந்தார். அவருக்கு கணிதத்தில் கற்றல் குறைபாடு இருந்தது.  ஆனால், அந்த மாணவரின் பெற்றோர் அவரை ஐஐடியில் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தனர். இதனால் நம்மால் அது முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார். அவரிடம் கற்றல் குறைபாடு இருப்பதை அவரின் பெற்றோரிடம் புரிகிற வகையில் சொன்னேன். பின்பு கணிதப் பிரிவு எடுக்காமல் பிளஸ் 1, பிளஸ் 2-வில்  உயிரியல் பாடம் எடுத்துப் படித்து தற்போது மகிழ்ச்சியாகப் படித்து வருகிறார்.

கணிதத்தில் கற்றல் குறைபாடு உடையவர்கள் தேர்வு எழுதும்போது கால்குலேட்டர் வைத்துக் கொள்ளலாம். டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு இருக்கும் மாணவர்கள் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதலாம். இதனால் மன அழுத்தத்தத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

மீன் நன்றாக நீச்சலடிக்கலாம். ஆனால், அதை மரத்தில் ஏறச் சொல்ல முடியுமா? அப்படித்தான் மாணவர்களின் திறமை ஒரு பக்கம் இருக்க அவர்களை எல்லோரும் ஓடும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடி எல்லோரையும் முதலிடத்துக்கு வரச் சொல்கிறார்கள். இதனால் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டி, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தால் ஸ்டீராய்டு என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மூளையின் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும். இதனால்தான் எவ்வளவு பெரிய சாதனையாளர்களும் புத்திசாலிகளும் மன அழுத்தத்தால் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கவனமின்மை, மறதி, தூக்கமின்மை, பசியின்மை ஆகியவை மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள்.

கிரிக்கெட்டில் 300 ரன்கள் எடுக்க வேண்டும். நம்மால் முடியும் என்று திட்டமிட்டு முயற்சி செய்தால் எடுக்கலாம். இது நல்ல மன அழுத்தம். பிரச்சினைகள் உருவாகும்போதுதான் சவாலாக எடுத்துக்கொண்டு சந்திக்க முடியும். அந்த சந்திப்பு சாதனையாக மாறும். நம்மால் முடியாது என்று நினைத்தால் அது தோல்வியில் முடியும். அதுவே கெட்ட மன அழுத்தமாக மாறும்.

மிதமான மன அழுத்தம் என்றால் அதற்கு மன நல ஆலோசகரை அணுகலாம். தீவிர மன அழுத்தம் என்றால் மனநல மருத்துவரை அணுகி மருந்து, சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதில் கூச்சப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தீவிர மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹலுசினேஷன் எனும் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் எண்ணம் இருக்கும். சம்பந்தமில்லாமல் எல்லோரையும் ஆபத்தான மனிதராகப் பார்ப்பார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியம்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடற்பயிற்சி செய்யலாம். ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் நடப்பது, ஓடுவது உடல் சோர்வைப் போக்கும். இதனால் மனச்சோர்வும் நீங்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை உடற்பயிற்சியால் சரி செய்ய முடியும். யோகா, தியானம் செய்யலாம்.

உணவுப் பழக்க வழக்கமும் மன அழுத்தத்துக்கான காரணம். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். காய்கறி, பழம் எடுத்துக்கொள்ளலாம்'' என்றார் ராமானுஜம்.

மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சல் என்றால் என்ன? மன நோய்க்கும் அவற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன, மன அழுத்தம் உள்ளவர்கள் யாரை அணுக வேண்டும் என்பது குறித்து மனநல ஆலோசகர் வந்தனாவிடம் பேசினோம்.

''இன்றைய காலகட்டத்துக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் தேவை. அதை குட் ஸ்ட்ரெஸ், யூஸ்ட்ரெஸ் என்று சொல்வோம். மாணவர்களுக்கு, பணிபுரிபவர்களுக்கு, பெண்களுக்கு என கொஞ்சம் ஸ்ட்ரெஸ் இருந்தால் அது அவர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அது அதீதமாக, தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மாறும்போது கெட்ட மன அழுத்தமாக மாறி அது உடலையும், மனதையும் பாதிக்கிறது. அப்போது மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அதனால் ஏற்படுவதே மனச்சோர்வு. இதைத்தான் டிப்ரஷன் என்கிறோம்.

மன உளைச்சல் இருந்தாலும் அதிலிருந்து வெளியே வரும்போது மனச்சோர்வு என்ற நிலைக்குச் செல்லமாட்டார்கள்.

மன அழுத்தம் ஒரே நிலையில் இரு வாரங்களுக்கு மேல் இருந்தால் ஆற்றல் குறையும். தூக்கமின்மை ஏற்படும். எதிலும் கவனம் செலுத்த முடியாது. பசி ஏற்படாது. குழப்பமாக இருக்கும். தன்னைத் தானே கையாள முடியாது.  இதுதான் மனச்சோர்வு.

வேலை அழுத்தம், தொடர் வேலை, சாப்பிடாமல் வேலை செய்வதால் சாதாரணமாக  களைப்பும், தலைவலியும் வரும். ஓய்வெடுத்துக் கொண்டால் களைப்பும்,  தலைவலியும் சென்றுவிடும். ஆனால், என்னதான் காபி குடித்தாலும், மாத்திரை போட்டாலும்  தலைவலியும் களைப்பும் தொடர்ந்து இருந்தால் அதுவே மன அழுத்தம்.  பெண்கள், குழந்தைகள், பதின் பருவத்தினர், கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்று எல்லோருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

அறிவியல் பூர்வமாக இல்லாமல், புரிதலுக்காகச் சொல்வதென்றால் மன நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மனச்சோர்வு, பதட்டம் சம்பந்தப்பட்ட நோய்கள், பயம், போபியா போன்றவற்றை சின்ன மனநோய் என்று சொல்லலாம்.

பெரிய மன நோய் என்றால் மனச்சிதைவு நோயைச் சொல்லலாம். மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கான்ஷியஸில் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. தனக்குள்ளேயே பேசிக்கொள்வார். குளித்தல், பல் துலக்குதல், சாப்பிடுதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார். இப்படி இருக்கும் நபரை பெரிய மனநோய் பாதித்துள்ளது எனலாம்.

சின்ன மனநோயை சரியாகக் கையாளாதவர்களும் பெரிய மனநோய்க்குத் தள்ளப்படுவார்கள்.

சினிமாவில் காட்டும்படி மனநோயால் பாதிக்கப்படுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவதில்லை.

பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட வாழ்க்கை முறை ஒரு காரணம். ஹார்மோன் மாற்றங்கள் இன்னொரு காரணம். மனச்சோர்வு நோய் பெண்களுக்கு அதிகம் வரும். ஆண்களுக்கு மனச்சிதைவு நோய் அதிகம் வரும். தலைவலிக்கு, காய்ச்சலுக்கு மாத்திரை, மருந்து எடுத்துக்கொள்வது எந்த அளவுக்கு அவசியமோ அது போல மனநோய்களுக்கு மருந்து, சிகிச்சை அவசியம். ஆனால், எல்லா மனநோய்களுக்கும் அது தேவைப்படாது.

மனநலப் பிரச்சினைகள் மிதமாக இருக்கும்போதே மன நல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்களை அணுகினால் பிரச்சினை தீர்ந்துவிடும். உடல்நலப் பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால், மனநலநோய்கள் என்றால் சம்பந்தப்பட்டவருக்கும், அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஏனெனில், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாதபோது பெர்சனாலிட்டி சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் அவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தாமல், பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

மிதமான மனநலப் பிரச்சினை இருப்பவர்கள், வேலை செய்ய முடிகிறது. ஆனால், எனக்கு தொந்தரவுகள் உள்ளன, பிரச்சினை இருக்கிறது, கவனம் சிதைகிறது என்றால் அவர்கள் மனநல ஆலோசகரை அணுகலாம். எனக்கு ரொம்ப பிரச்சினை, அன்றாட வேலைகளில் பாதிப்பு ஏற்படுகிறது, காயப்படுத்திக் கொள்கிறேன், தூக்கமில்லை, வேலைக்குப் போக பயமாக இருக்கு, வெளியே செல்ல அச்சப்படுகிறேன், தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்பவர்கள் மனநல மருத்துவரை அணுகலாம்.

மனநல ஆலோசகர்கள் தேவையான தெரபி, கவுன்சிலிங் கொடுப்பார்கள். மனநலப் பிரச்சினை இருப்பவர்களுக்கு மருந்தும் சிகிச்சையும் தேவை என்றால் மனநல மருத்துவர்களை அணுகச் சொல்வோம். மனநல மருத்துவர்களை அணுகும் நபர்களுக்கு மிதமான பிரச்சினைகள் இருக்கிறது என்றால் அவர்களும் சிகிச்சை தேவையில்லை, கவுன்சிலிங் போதும் என்று சொல்லி மனநல ஆலோசகர்களிடம் அனுப்புவார்கள். இது ஒரு கூட்டுச் செயல்பாடுதான்'' என்றார் வந்தனா.

மன அழுத்தம் வராமல் தவிர்க்க, வந்த பின் தடுக்க 10 ஆலோசனைகள்:

* எந்த சூழலிலும் அவசரப்படாமல் பொறுமையைக் கடைபிடியுங்கள்

* எதிர்மறை சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் தன்னம்பிக்கை மனிதராக நிமிர்ந்து நில்லுங்கள்

* நன்றாகத் தூங்குங்கள். சமூக வலைதளங்களுக்கு அளவான நேரம் ஒதுக்குங்கள்

* கலை, நகைச்சுவை, பாடல்கள், படங்கள், பயணங்கள், வேடிக்கையான வீடியோக்கள் ஆகியவற்றை ரசியுங்கள்

* மனதுக்கு உற்சாகம் அளிக்கும் வாசகங்கள், தத்துவங்கள், மேற்கோள்களைப் படியுங்கள்

* புகைப்பழக்கம், மதுப்பழக்கம் என எதற்கும் அசைந்து கொடுக்காமல் நோ சொல்லுங்கள்

* பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தியானம், யோகா பழகுங்கள்

* ஃபாஸ்ட் புட் உணவைத் தவிர்த்து மற்ற செரிமான உணவுகளுக்கு யெஸ் சொல்லுங்கள்

* குழந்தைகளைக் கொஞ்சுங்கள். செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுங்கள்

* உற்சாகமாக இருங்கள். உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான வட்டத்தை உருவாக்குங்கள்

 

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x