Published : 21 Mar 2017 09:27 AM
Last Updated : 21 Mar 2017 09:27 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: நதி நீர்ப் பிரச்சினைகளில் தீர்வு தேவை!- பி.ஆர்.பாண்டியன்

வறட்சியின் தாக்கத்தைத் தமிழகம் சந்தித்துவரும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், தண்ணீர் சிக்கனம், மாற்றுப் பயிர்கள் குறித்துப் பல யோசனைகளை முன்வைக்கிறார், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். அவருடன் ஒரு பேட்டி:

கோடை உச்சமடைவதற்கு முன்பே வறட்சி பற்றிப் பேசும் நிலை உருவாகிவிட்டதே?

தென் மேற்குப் பருவழைக் குறைவு, வட கிழக்குப் பருவமழை பொய்த்துப்போனது ஆகியவை வறட்சிக்கு அடிப்படைக் காரணங்கள். கேரளத்தில் மரங்கள் அழிக்கப்படுவதும், மலைகளைக் குடைந்து வீடுகள் கட்டப்படுவதும் மழை குறைவுக்குக் காரணம் என்பேன். கிடைத்த தண்ணீரைக் கர்நாடக, கேரள மாநிலங்கள் உரிய காலத்தில் பகிர்ந்தளிக்காமல் இருப்பதும் இன்னொரு காரணம். தமிழகத்தில் நிலத்தடி நீர் குறையத் தொடங்கி நீண்டகால மாகிவிட்டது.

நிலத்தடி நீரை மேம்படுத்த யோசனைகள் என்ன?

ஐந்து ஏக்கருக்கு ஒரு பண்ணைக் குட்டைகள் அமைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மக்கள் அனைவரும் குடியிருக்கும் பகுதியில் மழைநீர் சேமிப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் இயக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும். ஏரி, குளங்களைத் தூர் வாரி நீர் செறிவூட்டல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கு தளமட்டச் சுவர்கள் அமைத்து ஆறுகளில் கசிவுநீரைத் தேக்கிவைத்தும், நிலத்தடி நீரைச் சேமிக்க முடியும்.

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பயிர் வகைகள் உண்டா?

பாரம்பரிய விதைகள் வறட்சியைத் தாங்கி விளையக்கூடியவை என்று வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் போன்றோரின் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. மேலும், பிபிடி போன்ற குறைந்த வயதுடைய நெல் வகைகளும், வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை.

இவ்வாண்டு கோடைநெல் சாகுபடி செய்வது அதிக தண்ணீர் தேவை என்பதால் சாத்தியமில்லை. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பருத்தி, எள், பயறு வகைகள் சாகுபடி செய்வது மட்டும்தான் பாதுகாப்பானது. அனைத்து அணைகளும் வறண்டதால் மிகப் பெரிய அளவில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கட்டுப்பாடற்ற தண்ணீர்ப் பயன்பாட்டால் நிலத்தடி நீர் பறிபோகக்கூடிய பேராபத்தும் உள்ளது.

குடிமராமத்துப் பணித் திட்டம் குறித்து தங்கள் கருத்து என்ன?

அத்திட்டத்தின் அரசாணைப்படி விவசாயிகள் பாசனதாரர்கள் குழுக்கள் மூலமாகத்தான் அதனைச் செயல்படுத்த வேண்டும். 10% நிதி விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், அத்திட்டம் குறித்து விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தாமலும், அவர்களின் பங்களிப்பில்லாமலும் செயல்படுத்த முன்வந்திருப்பது கவலையளிக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழல் முறைகேடாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது.

நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நதிகள் இணைக்கப்பட வேண்டுமானால் அனைத்து ஜீவாதார நதிகளும் தேசிய மயமாக்கப்பட வேண்டும். நதிகள் மத்திய அரசுடமையாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமாகும். தற்போது நீண்டுகொண்டிருக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு சட்டப்படி முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். முதலில் தமிழகத்தில் மாநிலத்துக்குள் ஓடும் நதிகளை இணைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். மழைபெற மரம் வளர்ப்பு அவசியமானது. அரசு புறம்போக்கு நிலங்களிலும், மலைப் பகுதிகளிலும் மரம் வளர்ப்பதற்கான சிறப்புப் பெருந்திட்டத்தைக் கால நிர்ணயம் செய்து நிறைவேற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x