Published : 16 May 2017 08:46 AM
Last Updated : 16 May 2017 08:46 AM
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் சுதிர் ஜாதவைக் காப்பாற்றுவதற்காக, சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அணுகியது சரியான நடவடிக்கை.
இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான குல்பூஷண் சுதிர் ஜாதவ், பணி ஓய்வுக்குப் பிறகு தொழில் - வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். தொழில் நிமித்தமாக ஈரான் சென்றிருந்த அவரைக் கைதுசெய்த ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தானுக்கு அவரைக் கொண்டுசென்று, தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தியது. கண்துடைப்பாக நடத்தப்பட்ட ராணுவ நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியத் தூதரக அதிகாரிகள் அவரைச் சந்தித்துப் பேச அனுமதி கிடைக்கவில்லை. இது வியன்னா உடன்படிக்கையில், உலக நாடுகள் ஒப்புக்கொண்ட நடைமுறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஜாதவை அவருடைய உறவினர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று சந்திக்க ‘விசா’ அளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்தே, இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் இறுதி நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னால், சர்வதேசச் சட்டப்படியும் நடைமுறைப்படியும் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளுமாறு பாகிஸ்தான் அரசுக்கு எழுதிய கடிதத்தில் சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுப்பதற்கு விதித்த தடையாணையாகவே இதைக் கருதலாம்.
இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தின் பரிசீலனைக்குக் கொண்டுசென்றதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடுவது இது முதல்முறையல்ல. ‘இந்திய வான் எல்லை மீது பாகிஸ்தானிய விமானங்கள் பறக்கக் கூடாது’ என்று 1971-ல் இந்தியா உத்தரவிட்டது. இதை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து முகமை ஆட்சேபித்து, இந்தியாவிடம் விளக்கம் கேட்டது. உள்நாட்டுப் பாதுகாப்பில் அக்கறை கொண்டு எடுக்கும் நடவடிக்கையைக் கேள்வி கேட்கும் அதிகாரம் அந்த முகமைக்கு உண்டா என்று அறிவதற்காக சர்வதேச நீதிமன்றத்திடம் இந்தியா அப்போது முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியக் குடிமக்களின் உயிர்களையும் அவர்களுடைய உரிமைகளையும் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றத்தை அணுக இந்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. எனவே, காஷ்மீர் விவகாரத்திலும் சர்வதேசத் தலையீட்டை இந்தியா ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் சட்டரீதியாகவோ வேறு வழியிலோ இல்லை.
இந்தியக் கைதியை, இந்தியத் தூதரகம் சந்திக்க விரும்பினாலும், 2008-ல் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தப்படி அனுமதிக்க மறுக்கும் உரிமை தனக்கு இருக்கிறது என்று பாகிஸ்தான் அடுத்து வாதாடக் கூடும். அதற்கான உரிமை அதற்கு இருக்கலாம்; ஆனால், குல்பூஷணைத் தூக்கில் போடும் உரிமை அதற்கு இல்லை. இவ்விஷயத்தில் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் முறை, சர்வதேசச் சட்டங்களை அந்நாடு எப்படி மதிக்கிறது என்பதைக் காட்டும் உரைகல் என்றே சொல்லலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT