Last Updated : 01 Feb, 2023 02:06 PM

2  

Published : 01 Feb 2023 02:06 PM
Last Updated : 01 Feb 2023 02:06 PM

ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்டெடுத்த தமிழர்!

இந்தியா சுதந்திரமடைந்த தருணத்தில் நாடு முழுவதும் அலையடித்த ஆனந்தம் அளவிட முடியாதது. அதேவேளையில், உயர்மட்டத் தலைவர்களால் அந்த மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. நாட்டைக் கட்டமைக்கவும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் ஏகப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அதில் மிக முக்கியமான பிரச்சினை இந்திய சமஸ்தானங்கள் இந்திய அரசுடன் இணைப்பதுதான். அப்போது இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. ஆங்கிலேயருக்குக் கட்டுப்பட்ட சுயாட்சி அமைப்பாக அவை இருந்தன. சில சமஸ்தானங்கள் சுதந்திர இந்தியாவுடன் இணைய மறுத்து அடம்பிடித்தன. அவற்றில் முக்கியமானது ஹைதராபாத்.

நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்த ஹைதரபாத்தில் பாகிஸ்தான் ஆதரவு ரஜாக்கர்கள் ஏற்கெனவே பல வகையிலும் கலகங்கள் செய்து வந்தனர். இப்படியான சூழலில், ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்டெடுக்க, நாட்டின் முதல் உள் துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளைத் தொடங்கினார். சென்னை மாகாணத்திற்குப் பக்கத்தில் இருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்பதில், ஓமந்தூர் ராமசாமியின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவிவகித்த ஓமந்தூரார், ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்கும் விஷயத்தில் பெரும் பங்காற்றினார்.

1947 நவம்பர் மாதத்தில் ஹைதராபாத் சமஸ்தானம் ரஜாக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அக்காலகட்டத்தில் ஹைதராபாத் நிஜாம் அடிக்கடி முகம்மது அலி ஜின்னாவுடன் ரகசிய ஆலோசனைகள் நடத்திவந்தார். எந்த நேரமும் ஹைதராபாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைக்கப்படலாம் என்ற வதந்தி நாடெங்கும் பரவியது. இது டெல்லியின் உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களிடையே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் நடக்கும் தேச விரோத சதி வேலைகளை ஓமந்தூரார் கூர்ந்து அவதானித்து வந்தார். பெல்லாரி மாவட்ட ஆட்சியரான .சி.எஸ்.கே.எம்.அனந்தராமன், சென்னை மாகாணப் பகுதி ராணுவத் தளபதி மேஜர் ஸ்ரீ நாகேஷ் உள்ளிட்ட பலரைத் தினமும் தொடர்புகொண்டு நிலவரங்களை அறிந்து டெல்லிக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். இவற்றின் அடிப்படையில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சர்தார் வல்லபாய் பட்டேல் ஓமந்தூராரை அடிக்கடி தொலைபேசியில் ஆலோசனை கேட்டு செயல்பட்டார். ஹைதராபாத் சமஸ்தானத்தில் படை பலமும் ஆயுதங்களும் பெரிய அளவில் ரகசியமாகக் குவிக்கப்பட்டு வருகின்றன என்று ஓமந்தூரார் எச்சரித்தார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியாவின் ஏஜென்ட் ஜெனரலாக வல்லபாய் பட்டேலின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகச் செயல்பட்ட கே. எம்.முன்ஷி நியமிக்கப்பட்டார். 1947 டிசம்பர் 24-ல் ஹைதராபாத் நிலவரத்தை நேரில் கண்டு ஆய்வு செய்து, ஓமந்தூரார் சொன்ன தகவல்கள் சரியானவை என்பதை முன்ஷி உறுதிப்படுத்தினார். அதன் பிறகுதான் இந்திய அரசாங்கம் வேகமாகச் செயல்படத் தொடங்கியது. ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்கும் 'ஆபரேஷன் போலோ' என்னும் ரகசிய ராணுவ நடவடிக்கைத் திட்டம் உருவாக்கப்பட்டது.

ஹைதராபாத் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசாங்கத்தின் போலீஸாரிடம், "துணிச்சலாக ரஜாக்கர்களை திருப்பி தாக்குங்கள்!" என்று ஓமந்தூரார் கட்டளையிட்டார். ஆனால், ரஜாக்கர்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ளன. எப்படி திருப்பித் தாக்குவது? என்று அவர்கள் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். உடனடியாக சென்னையிலேயே துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளைத் தயார் செய்ய வேண்டும் என்று ஓமந்தூரார் முடிவெடுத்தார். பெரம்பூரில் ஒரு சாதாரண ரயில்வே தொழில் கூடம் இருந்தது. அங்கு பணியாற்றிய நடராஜன் நாட்டுத் துப்பாக்கிகள் செய்வதில் வல்லவர். அவரை அழைத்து ஆயுதங்கள் செய்வதற்காக ஆலோசனை நடத்தினார். 19450-ல் கோவையில் இயங்கிவந்த டெக்ஸ்டூல் ஆலையை ஆயுத தொழிற்சாலையாக மாற்ற எண்ணி, அதன் உரிமையாளரான சுந்தரத்திடம் கலந்து பேசி இயந்திரத் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களைத் தயாரித்தார்.

அதன்படி ஒரு பெரும் திட்டம் உருவானது. சென்னை, பம்பாய், மைசூர் ஆகிய மாகாணங்களில் இருந்தபடி ஒரே சமயத்தில் மும்முனை ராணுவத் தாக்குதல் நடத்தி ஹைதராபாத் சமஸ்தானத்தை ரஜாக்கர்களின் பிடியிலிருந்து விடுவித்து இந்திய அரசுடன் சேர்ப்பது என்பதுதான் அந்தத் திட்டம். சர்தார் வல்லபாய் பட்டேலும் ஓமந்தூராரும் எடுத்த துணிச்சலான ஒரு அதிரடி திட்டம் அது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் போலோ' (Operation Polo) என்று பெயர் சூட்டப்பட்டது.

1948 செப்டம்பர் 13-ல் இந்திய ராணுவப் படைகள் பம்பாய் மாகாணத்தின் சோலாப்பூரில் இருந்தும் சென்னை மாகாணத்தின் கர்னூலில் இருந்தும் விஜயவாடாவில் இருந்தும் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குள் ஆவேசமாக புகுந்து தாக்கத் தொடங்கின. செப்டம்பர் 17-ல் ராணுவத் தாக்குதலைத் தாங்க முடியாமல் இந்தியப் படைகளிடம் ஹைதராபாத் நிஜாம் அடைந்தார். செப்டம்பர் 18-ல் மேஜர் ஜெனரல் சவுத்ரி தலைமையில் இந்தியப் படைப்பிரிவு ஹைதராபாத் நகருக்குள் நுழைந்து சமஸ்தானத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்திய சுதந்திர வரலாற்றில் இந்த சமஸ்தானங்களின் மீட்புப் போராட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று!

ஹைதராபாத் பிரச்சினையைத் தீர்த்ததில் ஓமந்தூரார் நெஞ்சுரமிக்க பங்களிப்பு மகத்தானது என்பது, சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதில் வல்லபாய் பட்டேலின் வலதுகரமாக விளங்கிய அமைச்சரவைச் செயலாளர் வி.பி. மேனன் எழுதிய The Story of the Integration of the Indian States - (1956) என்ற நூலிலும் - பிற்காலத்தில் ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த கோபால ரெட்டியின் ஒரு கடிதத்திலும் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தை மீட்டெடுத்த தொடர்ச்சியான செயல்பாடுகளில் ஓமந்தூராரின் பங்களிப்பு முக்கியமானது என்று வல்லபாய் பட்டேல் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், இந்தியாவின் முக்கியமான வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா போன்றோர் எழுதிய நூல்களிலும்கூட ஓமந்தூராரின் இத்தகைய சாதனைகள் விடுபட்டுள்ளன. இந்திய சுதந்திர வரலாறு தொடர்பான பல நூல்களில் ஓமந்தூராரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுத் துயரம்!

- இன்று ஓமந்தூராரின் பிறந்தநாள் (1895 பிப்ரவரி 1)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x