Published : 21 Sep 2017 10:26 AM
Last Updated : 21 Sep 2017 10:26 AM
ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக விஜயவாடா எம்.பி.க்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
பழம்பெரும் நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவுக்கு நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். என்.டி.ராமாரா வின் மகன்களான ஹரி கிருஷ்ணா, பாலகிருஷ்ணா மற்றும் என்.டி.ஆரின் மனைவி லட்சுமி பார்வதி ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயவாடா மக்களவை தொகுதி உறுப்பினர் கேசினேனி நானி கடந்த ஜூலை 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போது, “என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என மீண்டும் கோரிக்கை வைத்தார்.
அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், “பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை என்.டி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT