Published : 22 Sep 2017 08:36 AM
Last Updated : 22 Sep 2017 08:36 AM
உ.பி.யில் பஞ்சாப் தீவிரவாதியை தப்பிக்க விடுவதற்கு ரூ.45 லட்சம் லஞ்சம் பெற்றதாக அம்மாநில போலீஸ் ஐஜி ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து டிஜிபி தலைமையிலான குழு விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க பாபர் கல்ஸா இன்டெர்நேஷனல், காலிஸ்தான் விடுதலைப் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பஞ்சாப் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் ஒன்றான நபா சிறையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி திடீரென 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். இவர்கள் காலிஸ்தான் விடுதலைப் படையின் ஹர்மீந்தர் மிண்டோ, கோபி கன்ஷியாம்புரா உட்பட 6 பேரை சிறையில் இருந்து தப்ப வைத்தனர்.
இதற்கு மறுநாள் டெல்லி ரயில் நிலையம் அருகில் ஹர்மீந்தர் மிண்டோ கைது செய்யப்பட்டார். அடுத்து தீவிரவாதிகளை தப்பிக்க வைத்தவர்களில் முக்கிய குற்றவாளியான பர்வந்தேர்சிங், மேற்கு உ.பி.யின் ஷாம்லியில் கைது செய்யப்பட்டார்.
ஷாம்லி மாவட்டமும் அதன் அருகில் உள்ள முசாபர் நகர் மாவட்டமும் சமீபகாலமாக பஞ்சாப் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாகப் புகார் உள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் உ.பி. அதிரடிப்படையுடன் இணைந்து பஞ்சாப் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த இரு வாரங்களுக்கு முன் காலிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹோட்டலில் நடந்த பேரம்
இவர்களிடம் நடத்திய விசாரணையில், உ.பி.யின் ஷாஜஹான்பூரில் கடந்த 10-ம் தேதி மாநில அதிரடிப்படையிடம் காலிஸ்தான் தீவிரவாதி கோபி கன்ஷியாம்புரா சிக்கியதாகவும் ஆனால் போலீஸ் ஐ.ஜி. ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவரை தப்பவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஐ.ஜி.யுடன் லக்னோ நகர ஹோட்டல் ஒன்றில் நடந்த பேரத்தில் ரூ.45 லட்சம் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் இதன் இடைத்தரகராக ஐ.ஜி.யின் உறவினரும் சுல்தான்பூர் காங்கிரஸ் பிரமுகருமான சந்தீப் திவாரி செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் சந்தீப் திவாரி மற்றும் பிலிபித் மாவட்டத்தை சேர்ந்த இருவர் பிடிபட்டனர். இவர்களிடம் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் ரூ.45 லட்சம் லஞ்சப் புகாரை விசாரிக்கும்படி உ.பி. அரசுக்கு பஞ்சாப் போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இக்கடிதம் தொடர்பாக உ.பி. டிஜிபி சுல்கான்சிங், உள்துறை முதன்மை செயலாளர் அர்விந்த்குமார் ஆகியோருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். பின்னர் லஞ்சப் புகார் தொடர்பாக டிஜிபி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “விக்கி கோண்ட் எனும் ஹர்ஜிந்தர்சிங் புல்லர் என்பவர் தனது முகநூலில் உ.பி. அதிரடிப்படையினரிடம் தனது நண்பர் கோபி கன்ஷியாம்புரா சிக்கியதாக கடந்த 10-ம் தேதி குறிப்பிட்டிருந்தார். கோபி என்கவுன்ட்டர் செய்யப்பட்டு விடுவார் எனப் பயந்து அவர் இந்தப் பதிவை செய்திருந்தார். ஆனால் உ.பி. போலீஸார் இதை மறுத்து விட்டனர். தொடர்ந்து, உ.பி.யில் சிக்கிய 6 பேரிடம் நடத்திய விசாரணையில் கோபி லஞ்சம் அளித்து தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய உளவுத் துறையும் விசாரித்து வருகிறது. இவர்களிடம் சில டேப் மற்றும் கைப்பேசி பதிவுகளும் சிக்கியுள்ளன” என்று தெரிவித்தனர். இதற்கிடையே உ.பி. அதிரடிப்படை தன் மீதான லஞ்சப் புகாரை மறுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT