Published : 22 Sep 2017 08:35 AM
Last Updated : 22 Sep 2017 08:35 AM
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கேயுள்ள கபினி அணை முழுமையாக நிரம்பியுள்ளதால் அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று சமர்ப்பண பூஜை செய்தார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு மாதங்களாக கன மழை பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய துணை நதியான கபினி உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணை கடந்த மாதமே முழு கொள்ளளவை எட்டியது.
மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா கபினி அணையில் நேற்று சமர்ப்பண பூஜை (பாகிணி) செய்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு பிறகு, கபினி அணைக்கு சமர்ப்பண பூஜை செய்ததால் மைசூரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இதே போல மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 8 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் திறக்கப்பட்டுள்ள நீரில் 10 ஆயிரம் கன அடி நீர், கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு அளவை நிலையத்தை கடந்து மேட்டூர் அணைக்கு செல்வதாக காவிரி நீர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம்
கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று மைசூருவில் கூறியபோது, “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முயற்சித்தால், கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும்” என்று தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையா கூறியபோது, “உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு நியாயம் கிடைக்கும். அதேவேளையில் கண்காணிப்பு குழுவையோ, மேலாண்மை வாரியத்தையோ அமைத்தால், அதனை கர்நாடக அரசு ஒருபோதும் ஏற்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT