Published : 21 Sep 2017 08:14 PM
Last Updated : 21 Sep 2017 08:14 PM
திரிபுரா தொலைக்காட்சி நிருபர் சந்தனு போவ்மிக் படுகொலைக்கு பாஜக ஆதரவளிக்கும் கும்பலே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ கடுமையாகச் சாடியுள்ளது.
சிபிஎம் ஆதரவு திரிபுரா உபஜாதி கன் முக்தி பரிஷத் தொண்டர்களுக்கும் திரிபுரா பூர்வக்குடிகள் முன்னணியினருக்கும் இடையே புதனன்று ஏற்பட்ட மோதலில் திரிபுராவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் சந்தனு பவ்மிக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணிக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்த அசாம் அமைச்சர் மற்றும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா தனது ட்வீட்டில், “இளம் பத்திரிகையாளர் கொலைக்குக் கடும் கண்டனங்கள். ஸ்ரீமனிக் சர்க்காரின் சிபிஎம் அரசு இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்” என்றார்.
சிபிஎம் இதற்குப் பதிலடியாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், பாஜக மாநில பொறுப்பாளர் சுஜித் பானர்ஜி எழுதியாகக் கருதப்படும் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய தலைமை உத்தரவுக்கு ஏற்ப திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணிக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிஎம் பொலிட்பீரோ தனது அறிக்கையில், “கவுரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து இன்னொரு முற்போக்குவாத பத்திரிகையாளர் கொலை நிகழ்ந்துள்ளது. இதிலெல்லாம் ஒரேமாதிரியான ஒரு போக்கு தெரிகிறது. குறிப்பாக தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஒரு குறிப்பிட்ட வகைமாதிரியில் இத்தகையச் செயல்களைச் செய்து வருகிறது. முற்போக்குப் பத்திரிகையாளர்களை மவுனத்திற்குள் செலுத்துவதும் உண்மை மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளனர்” என்று சாடியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT