Last Updated : 21 Sep, 2017 10:23 AM

 

Published : 21 Sep 2017 10:23 AM
Last Updated : 21 Sep 2017 10:23 AM

நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை நாள்தோறும் விசாரித்துவருகிறது. கடந்த 27 நாட்களாக கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, விரிவாக வாதிட்டனர். இதை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் மத்திய அரசின் சார்பாக ஆஜராகி, காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகளின் சார்பாக எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘இவ்வழக்கை சரியாக புரிந்துகொள்ளும் வகையில் 4 மாநில அரசுகளின் சார்பாகவும் காவிரி நீர்ப்பாசனத்துறை நிபுணர்கள் தங்களது வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். நிபுணர்களின் எழுத்துப்பூர்வ வாதத்தை தொடர்ந்து, மத்திய அரசின் காவிரி மேற்பார்வை குழுவின் வாதத்தையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தொழில்நுட்ப நிபுணர்கள் தங்களது மாநிலத்தின் சரியான காவிரி பாசன பகுதியின் அளவு, அதன் நீர்போக்கு, நீர் தேவையின் அளவு, ஆண்டு மழை விவரம், சாகுபடி பயிர் வகை உள்ளிட்ட விவரங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். அப்போது தமிழக அரசு சார்பில், ‘‘எங்களது தொழில்நுட்ப ரீதியான வாதங்களை காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் தெரிவிப்பார்' என கூறப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளது.

இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது’’என உத்தரவிட்டார். கர்நாடகா - தமிழகம் இடையே கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x