Published : 11 Feb 2023 05:02 AM
Last Updated : 11 Feb 2023 05:02 AM

மும்பையில் இருந்து ஷீரடி, சோலாப்பூருக்கு 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கினார் பிரதமர்

மும்பை: மும்பையிலிருந்து சாய்நகர் ஷீரடி, சோலாப்பூர் நகரங்களுக்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதல் ரயில் சேவை தலைநகர் டெல்லி - வாரணாசி இடையே தொடங்கியது. அதைப் போலவே சென்னை-மைசூரு இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையிலிருந்து ஷீரடி, சோலாப்பூர் ஆகிய நகரங்களுக்கு 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையத்தில் நேற்று நடைபெற்றது.

மும்பை-சோலாப்பூர் வந்தே பாரத் ரயிலானது 455 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. இதேபோல் மும்பை-சாய்நகர் ஷீரடி வந்தே பாரத் ரயிலானது 343 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடங்களில் கடக்கிறது. நாடு முழுவதும் ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு சேவை அளிக்கவே இந்த வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டுள்ளது.

சாய்நகர் ஷீரடி-மும்பை இடையே இயக்கப்படும் ரயிலில் சேர் கார் இருக்கைக்கு ரூ.840, எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கைக்கு ரூ.1,670 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கடந்த ஒரு மாதத்தில் 2-வது முறையாக பிரதமர் மோடி, மும்பை வந்துள்ளார். கடந்த மாதம் 19-ம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது 2-வது முறையாக வந்தே பாரத் ரயில் திட்ட விழாவுக்கு வந்துள்ளார். விரைவில் மும்பை பெருமாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் வருகை மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x