Published : 11 Feb 2023 04:58 AM
Last Updated : 11 Feb 2023 04:58 AM

மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் - திமுக எம்பிக்கள் காரசார விவாதம்

புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, திமுக எம்.பி.க்கள் இடையே நேற்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பி டி.ஆர்.பாலு, "நாட்டில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தொடங்கப்பட்டிருக்கின்றன? பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவ கல்லூரி களில் எத்தனை கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்து பேசியதாவது:

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் அரசியலாக்கி வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு உள்கட்டமைப்பு வசதி மட்டுமே ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அமைக்க உரிய நேரத்தில் மாநில அரசு நிலத்தை ஒதுக்கவில்லை. இந்த திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த நிறுவன பிரதிநிதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மதுரைக்கு வரமுடியவில்லை. திட்டச் செலவு அதிகரித்திருக்கிறது. இதுவரை ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது.

அனைத்து தகவல்களையும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு அளித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி அவர்கள் அரசியல் செய்கின்றனர். அவர்கள் அரசியல் செய்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. சுகாதாரத் துறையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் கல்லூரிக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரூ.1,900 கோடியில் நல்ல மருத்துவக் கல்லூரி கட்டப்படும். போதிய வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவ கல்லூரிகள் செயல்பட நான் அனுமதி வழங்கமாட்டேன். தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவையின் மையப்பகுதியில் கூடிய அவர்கள், மிரட்டல் விடுக்கும் வகையில் அமைச்சர் பேசுவதாக குற்றம் சாட்டினர். அமைச்சருக்கும் திமுக எம்பிக்களுக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதத்தால் அமளி ஏற்பட்டது.

அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா குறுக்கிட்டு,திமுக எம்பிக்களை சமாதானப் படுத்தினார். அவர் கூறும்போது, “அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவ கல்லூரிகள் செயல்பட அனுமதிக்க மாட்டேன் என்று அமைச்சர் மாண்டவியா கூறினார். இதில் எந்த தவறும் இல்லை. அவர் பொதுவாகவே பேசினார்" என்று தெரிவித்தார்.

மக்களவைத் தலைவரின் சமரசத்தை ஏற்காத திமுக எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இறுதியில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x