Published : 03 Feb 2023 04:03 PM
Last Updated : 03 Feb 2023 04:03 PM

கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கான நியமனம் விரைவில் நடைபெறும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலீஜியம் மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்திருந்தது.

நீதிபதிகள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை, நீதிபதிகள் கவுல் மற்றும் ஏ.எஸ் ஒகா அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார்.

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் மத்திய அரசின் தாமதம் குறித்து அதிருப்தியை வெளியப்படுத்திய நீதிபதிகள் அமர்வு, இது மிகவும் முக்கியமான பிரச்சினை. மிகவும் சங்கடமான நிலைப்பாட்டை எடுக்க எங்களை நிர்பந்திக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, கொலீஜியம் கடந்த 2022ம் ஆண்டு டிச.13ஆம் தேதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அஷானுத்தின் அமனுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்திருந்ததது.

இவர்கள் ஐந்து பேரும் நீதிபதிகளாக பதவி ஏற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயரும். தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். தற்போது 27 நீதிபதிகளே உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x