Published : 03 Feb 2023 12:06 PM
Last Updated : 03 Feb 2023 12:06 PM

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான விசாரணை கோரி பிப்.6-ல் காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்


புதுடெல்லி: அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக வரும் பிப்.6-ம் தேதி நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், "மத்திய அரசு சாமானிய மக்களின் பணத்தை எடுத்து அவர்களது நண்பர்கள் பயனடை உதவி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி,பிப்.6ம் தேதி (திங்கள் கிழமை) நாடுதழுவிய அளவில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை காலையில் மாநிலங்களையின் எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கார்கேயின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறார்கள். அதே கோரிக்கை தான். ஒரு சுதந்திரமான விசாரணையின் மூலம் மட்டுமே பிரதமரின் அழுத்தத்தின் பெயரில் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற பொதுத்துறை நிறுனங்களை காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக நேற்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகி இருக்கும் ஹின்டென்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இரண்டு மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. அதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சிகள், அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதா என்பது குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்பார்வையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x